மஞ்சுங்:
மேற்கு கடற்கரை விரைவுச் சாலையில் (WCE) தெற்கு நோக்கி செல்லும் KM 212.3 இல் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் தாய் மற்றும் அவரது மகன் உயிரிழந்தனர்.
இன்று (டிசம்பர் 26) அதிகாலை 5 மணியளவில் நடந்த விபத்தில், நோர் ஃபதிலா முகமட் அஸ்லான், 24, மற்றும் அவரது இரண்டு வயது மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று, பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் (செயல்பாடு) சபரோட்ஸி நோர் அமாட் கூறினார்.
சம்பவம் தொடர்பில் அவசர அழைப்பு வந்ததையடுத்து, அயிர் தவார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த பணியாளர்கள் அதிகாலை 5.15 மணிக்கு அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும், அங்கு அவர்கள் வந்தபோது விபத்தில் ஒரு புரோட்டான் வீரா மற்றும் ஒரு பெரோடுவா கெலிசா ஆகிய கார்கள் சம்பந்தப்பட்டிருந்தது என்றும், விபத்தில் பாதிக்கப்பட்ட ஆறு பேரையும் அகற்ற பொதுமக்கள் உதவினார்கள் என்றும் அவர் சொன்னார்.
சம்பவ இடத்தில் இறந்தவர்களின் சடலங்கள் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன, மேலும் காயமடைந்த நான்கு பேர் சிகிச்சைக்காக ஸ்ரீ மஞ்சுங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.