‘போதையில் அவர் கூறிய வார்த்தை, எனது இசை திறமையை வளர்க்க மிகவும் உதவியது’ – ஏ.ஆர்.ரகுமான்

சென்னை,இந்தியத் திரைப்பட உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளிவந்த ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

தமிழ், இந்தி , ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் ‘இசைப்புயல்’ என அழைக்கப்படுகிறார். 7 தேசிய விருதுகளை வென்றுள்ள இவர் ஸ்லம்டக் மில்லியினர் படத்திற்கு இசை அமைத்ததற்காக உலக அளவில் திரைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதை வென்றார். இந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர் ரகுமான் தற்போது பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில், தனது இசை வாழ்வின் ஆரம்பத்தில், தன்னுடன் இசைக்குழுவில் பணியாற்றிய கிதார் கலைஞர் குடிபோதையில் சொன்ன ஒரு வார்த்தை தனது இசை திறமையை வளர்க்க மிகவும் உதவியதாக ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

‘நான் இரண்டு இசையமைப்பாளர்களுடன் ஒரு குழுவில் பணிபுரிந்தேன். அப்போது எனக்கு 19-வது இருக்கும் என நினைக்கிறேன். அதே குழுவில் கிதார் கலைஞராக இருந்த ஒருவர் குடி போதையில் என்னிடம் ஏன் திரைப்படங்களில் உள்ள இசையை வாசிக்கிறீர்கள் என்று கேட்டார்.

அப்போது அது என்னை மிகவும் பாதித்தது. பின்னர்தான் கிதார் கலைஞரின் கருத்து உண்மையில் சரியானது என்பதை உணர்ந்தேன். அதற்கு பிறகுதான் எனது பாணி என்ன என்பதை அடையாளம் காணும் எனது பயணம் தொடங்கியது’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here