2,569 ஏக்கரில் சபரிமலை கிரீன்பீல்டு விமான நிலையம்!

சபரிமலை விமான நிலையம் 2,569 ஏக்கரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைக்கும் பட்சத்தில் 3.4 லட்சம் மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

கேரளாவில் ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விமான நிலையம் அவசியம் என்பது அங்குள்ளோரின் நீண்ட நாளைய கோரிக்கையாகும்.

இதையடுத்து, அங்கு சர்வதேச கிரீன்பீல்டு விமான நிலையம் 2,569 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக, மணிமலா மற்றும் எரிமேலி (தெற்கு) கிராமங்களில் இருந்து 1,039.876 ஏக்கர் நிலங்கள் விமான நிலைய கட்டுமான பணிக்காக கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந் நிலையில், விமான நிலையம் அமைக்கும் பணிகள் குறித்து கோட்டயம் மாவட்ட நிர்வாகம் சமூக தாக்க மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;

விமான நிலையம் அமைக்க மணிமலா மற்றும் எரிமேலி (தெற்கு) கிராமங்களில் இருந்து மட்டும் 1039.876 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட வேண்டும். மொத்தம் 3.4 லட்சம் மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும். அவற்றில் 3.3 லட்சம் ரப்பர் மரங்கள், 2492 தேக்கு, 2247 காட்டு பலாமரங்கள், 828 மகோகனி, 1131 பலாமரங்கள், 184 மாமரங்கள் அகற்றப்பட வேண்டியிருக்கும்.

சில வழிபாட்டுத்தலங்களும் இடிக்கப்பட வேண்டியிருக்கும். அவற்றுக்கான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

விமான நிலைய கட்டுமான பணிகள் மூலமாக 347 குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படும். அவர்களில் 238 குடும்பங்கள் செருவேலி எஸ்டேட் பகுதியில் பணியாற்றும் குடும்பங்களாகும். விமான நிலையம் அமைக்கப்பட்டால் உள்ளூர் வணிகம் மேம்படும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் உயரும்.

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here