பிலிப்பைன்சை தாக்கிய கல்மய்கி சூறாவளி — 66 பேர் பலி, 2 இலட்சம் பேர் வெளியேற்றம்

சிபு (பிலிப்பைன்ஸ்):

பிலிப்பைன்சில் சிபு நகரை தாக்கிய ‘கல்மய்கி’ சூறாவளி கடும் அழிவை ஏற்படுத்தி, குறைந்தது 66 பேரின் உயிரிழப்புக்கு காரணமானது. பலர் காயமடைந்துள்ளனர், மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளனர் என பிலிப்பைன்ஸ் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூறாவளி தற்போது பலாவான் மாகாணம் வழியாக தென் சீனக் கடலை நோக்கி நகர்கிறது. மணிக்கு 125 முதல் 165 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் புயல் காற்று வீடுகள், கட்டிடங்கள் மற்றும் மின்கம்பங்கள் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளை அழித்துவிட்டது.

சுற்றுலாத் தளமாகப் பிரபலமான சிபு நகரம் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளது. பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, சாலைகள் தண்ணீரில் மூழ்கின. மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மின்டானோ மற்றும் விசயாஸ் பகுதிகளில் இருந்து 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

மின்டானோ தீவின் வடக்கு பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் ஆறு ராணுவ வீரர்கள் உட்பட பலர் உயிரிழந்தனர்.

பிலிப்பைன்ஸ் வானிலை ஆய்வு மையமான ‘பகாசா’ தெரிவித்ததாவது: “கல்மய்கி தற்போது வலுவிழந்து தென் சீனக் கடலுக்குள் நுழைந்தாலும், மீண்டும் சீற்றமடைய வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் (நவம்பர் 7) அது வியட்னாம் நோக்கி நகரும்,” என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் புயல், இவ்வாண்டு பிலிப்பைன்சைத் தாக்கியுள்ள 20வது சூறாவளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிபுவில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்கனவே மக்கள் பெரும் இழப்பைச் சந்தித்திருந்த நிலையில், இப்போது ஏற்பட்டுள்ள சூறாவளி மற்றும் வெள்ளம் அங்குள்ள மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வெள்ளம் வடிந்தபின் வீடுகள், பாலங்கள், மற்றும் துறைமுகங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், மீட்பு பணிகள் முழு வேகத்தில் நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here