உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போர் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் முதலில் அதிவேகமாக ரஷியா உக்ரைன் பகுதிக்குள் முன்னேறியது. அதன்பின் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் செய்தன. இதனால் உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தியது.
இதனால் ரஷிய ராணுவம் பின்வாங்க தொடங்கியது. மேலும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இழந்தது. இதனால் வெளிநாட்டில் உள்ள இளைஞர்களை அதிக சம்பளம் தருவதாக ஆசைவார்த்தை கூறி ராணுவத்தில் இணைத்தது.
அப்படி இந்தியாவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவரை ராணுவத்தில் சேர்த்து உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ஈடுபடுத்தியது ரஷியா. உக்ரைனுக்கு எதிரான சண்டையில் இந்தியாவைச் சேர்ந்த சிலர் உயிரிழந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் உக்ரைனுக்கு எதிராக ரஷியா ராணுவத்தில் சண்டையிட்ட இந்தியர்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-ரஷிய ராணுவத்தில் பணிபுரியும் இந்தியவர்கள் குறித்து நாங்கள் சேகரித்த தகவலின்படி மொத்தம் 126 பேர் பணிபுரிந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதில் ஏற்கனவே 96 பேர் நாடு திரும்பிவிட்டனர். இவர்கள் ரஷியாவின் ராணுவ ஆயுதப்படையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இன்னும் 18 பேர் சண்டை களத்தில் உள்ளனர். இந்த 18 பேர்களில் 16 பேர் இருக்கும் இடம் தெரியவில்லை. ரஷிய அதிகாரிகள் அவர்களை மாயமானவர்கள் எனப் பட்டியலிட்டுள்ளனர். இதுவரை சண்டையில் 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.