கிள்ளான்:
கிள்ளானின், தாமான் அமான் பெர்டானாவில் உள்ள எரிவாயு சேமிப்பு தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மூவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஜாலான் அமான் பெர்டானா 6 இல் உள்ள KL Gas Enterprise Sdn Bhd தொழிற்சாலையில், இன்று அதிகாலை 12.55 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானதுடன் நால்வர் எந்தக் காயமுமின்றி உயிர்தப்பினார் என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) அமாட் முக்லிஸ் முக்தார் கூறினார்.
“குறித்த தொழிற்சாலையின் இரண்டு கட்டிடங்களும் குறிப்பிடத்தக்க சேதத்தை சந்தித்தன, தொழிற்சாலை மற்றும் சேமிப்பு கிடங்கு 80 விழுக்காடு தீயில் எரிந்து நாசமானது, அதே நேரத்தில் அங்குள்ள செப்பு பதப்படுத்தும் ஆலை சுமார் 20 விழுக்காடு எரிந்தது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இருப்பினும் அதிகாலை 2 மணியளவில் தீ வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்றும், தீ விபத்துக்கான சரியான காரணம் மற்றும் இழப்புகள் தொடர்பில் விசாரணைகள் நடந்து வருகின்றன,” என்றும் அவர் கூறினார்.





















