திருமண விழாக்களின் போது சுவாரஸ்யமாக நடைபெறும் சில சம்பவங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிரப்படுவதுண்டு. அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஹரித்துவாரை சேர்ந்த விவேக் குமார் என்பவர் தனது சொந்த திருமணத்தில் அர்ச்சகராக மாறி, வேத மந்திரங்கள் உச்சரித்த காட்சி உள்ளது.
ராம்பூர் பகுதியில் இருந்து மணமகன் ஊர்வலமாக ஹரித்துவார் வருவது போன்று வீடியோ தொடங்குகிறது. அங்கு மணமேடையில் விவேக் குமார் ஏறியதும் மணமகள் வருகிறார். பின்னர் மேடையில் விவேக் குமார் திருமண சடங்குகளை செய்கிறார்.
தனது திருமண விழாவில் அவர் வேத மந்திரங்களை உச்சரித்து சடங்குகளை நடத்தியதை அங்கிருந்தவர்கள் வியப்புடன் பார்த்தனர். விவேக்குமார் பிளஸ்-2 முடித்த பிறகு வேத படிப்பை தொடர்ந்தார். ஆரிய சமாஜத்தின் மரபுகளுடான அவரது உறவு திருமணத்தின் போது மந்திரங்களை உச்சரிக்க தூண்டியதாக அவர் கூறினார்.









