சென்னை விமான நிலையத்தில் 35 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் – பாலிவுட் துணை நடிகர் கைது

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் 35 கோடி ரூபாய் மதிப்புடைய 3.5 கிலோ போதைப்பொருள் கடத்தப்பட்டதாக வெளிப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பாலிவுட் துணை நடிகரான 32 வயதான விஷால் பிரம்மா கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சுங்கத்துறையினருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 28) போதைப்பொருள் கடத்தப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுங்கத்துறை மற்றும் வருவாய் புலனாய்வு இயக்ககம் (DRI) இணைந்து தீவிர சோதனை மேற்கொண்டது.

இந்த சோதனையில், ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ என்ற இந்தி படத்தில் துணை வேடத்தில் நடித்த அசாமைச் சேர்ந்த விஷால் பிரம்மா சந்தேகத்தின் பேரில் நிறுத்தப்பட்டார்.

அவரின் பயணப் பெட்டியின் அடிப்பகுதியைத் திறந்து சோதித்தபோது, நெகிழிப்பை ஒன்றில் மாவு போன்ற வெள்ளைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. பரிசோதனைக்குப் பின் அது போதைப்பொருள் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

விசாரணையில், விஷால் பிரம்மா “நான் போதைப்பொருள் கடத்தவில்லை, கம்போடியாவில் அடையாளம் தெரியாத ஒருவர் அந்தப் பெட்டியை தந்தார். அதை சென்னையில் ஒருவர் வாங்க வருவார் எனக் கூறினார்” என்று விளக்கம் அளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஷால் பிரம்மா தற்போது காவல்துறையின் விசாரணையில் உள்ளார். அவர் தனியாக செயல்பட்டாரா அல்லது பெரிய சர்வதேச கும்பலின் ஒரு பகுதியாக இருந்தாரா என்பதைக் கண்டறிய அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here