காதலியின் 4 மாத குழந்தையை கொலை செய்த 15 வயது சிறுவன் கைது

காந்திநகர்,குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் உள்ள உமர்கம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன், அதே பகுதியை சேர்ந்த முஸ்கான் அஸ்கரலி என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, ஒரு குழந்தை இருந்துள்ளது.

இந்த காதல் விவகாரம் சிறுவனின் குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில், அவர்கள் சிறுவனை கண்டித்துள்ளனர். தனது காதலுக்கு குழந்தைதான் தடையாக இருப்பதாக நினைத்த சிறுவன், தனது காதலியின் 4 மாத குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதன்படி கடந்த 13-ந்தேதி, தனது காதலி வெளியே சென்றிருந்தபோது, வீட்டில் இருந்த பச்சிளம் குழந்தையை, தலையில் அடித்து அச்சிறுவன் கொலை செய்துள்ளான். பின்னர் வீட்டிற்கு வந்த காதலியிடம் குழந்தை தவறி கீழே விழுந்துவிட்டதாக நாடகமாடியுள்ளான். மருத்துவமனைக்கு சென்றபோது குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் உறுதி செய்தனர்.

குழந்தை உயிரிழந்த மறுதினமே சிறுவன் ஊரை விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த முஸ்கான் அஸ்கரலி, தனது குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தையின் தலையில் பலமாக தாக்கப்பட்ட காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தலைமறைவான சிறுவனை போலீஸார் தனிப்படை அமைத்து தேடினர். இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வைத்து சிறுவனை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அந்த சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here