டீப் சிக் வலைத்தளத்தால் மலேசியாவிற்கு ஏற்பட போகும் தாக்கம் குறித்து அரசாங்கம் ஆய்வு- கோபிந்த்

சீனாவின் டீப் சிக் செயற்கை நுண்ணறிவு ( ஏஐ) வலைத்தளம் மலேசியாவில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து அரசாங்கம் ஆய்வு செய்கிறது என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேற்று தெரிவித்தார். டீப் சிக் வலைத்தளம் மிக துரிதமாக கவனத்தை ஈர்த்து வருகிறது. சாட், ஜிபிடி ஓபன் ஏஐ போன்ற மற்ற வலைத்தளங்களை மிஞ்சும் அளவிற்கு ஆற்றலைக் கொண்டுள்ளது.

ஆகவே டீப் சிக் வலைத்தளத்தின் மீது அரசாங்கம் தீவிர கவனம் செலுத்துகிறது. அதன் வடிவமைப்பின் மீதும் கவனம் செலுத்தி வருகிறோம். ஏஐ தொழில்நுட்பத்தின் துரித விரிவாக்கத்திற்கேற்ப உள்நாட்டு பயனீட்டிற்கு அது பொருத்தமானதா என்பதை தீர்மானப்பதற்கு முன் இந்த ஆய்வு நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சாட் ஜிபிடி வலைத்தளம் தோன்றியதை நாம் பார்த்து விட்டோம். அதே போல் ஏஐ உலகத்தில் ஏற்பட்டுள்ள மேலும் சில முன்னேற்றங்களையும் நாம் பார்த்து விட்டோம். இது தொடர்ந்து நீடிக்கக்கூடியது. நடப்பு சூழ்நிலைக்கேற்ப இன்னும் ஏராளமான வலைத்தளங்கள் தோன்ற போவதையும் நாம் பார்க்கதான் போகிறோம் என்று கோபிந்த் சிங் டியோ விவரித்தார்.

ஆகவே இது நாம் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒரு விஷயம் என நான் கருதுகிறேன். எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியை நாமும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் எப்படி தயார்படுத்திக் கொள்ள முடியும் பற்றியும் நாம் பார்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

நேற்று ஷாஆலம் அருள்மிகு ஶ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில் ஆலய டிஜிட்டல் நிர்வாக நடைமுறை தொடர்பான விளக்கமளிப்பில் கலந்து கொண்டபின் அவர் இதனை கூறினார்.  சீனாவின் சாட் போர்டு ஏஐ டீப் சிக் வலைத்தளம் உலகளவில் துரிதமான கவனத்தை ஈர்த்து வருகிறது என்று கடந்த ஜனவரி 29ஆம் தேதி ஏஜென்சி அனா டோலு தகவல் வெளியிட்டிருந்தது.

மிகச்சிறிய வளத்தைக் கொண்டிருப்பினும் சாட் ஜிபிடி வலைத்தளத்தை இந்தப் புதிய வலைத்தளம் மிஞ்சி விட்டது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தப் புதிய வலைத்தளம் துரிதமாக விரிவடைகிறது. செலவுகள் ஆற்றல் அடிப்படையில் அது சிறந்ததாக விளங்குகிறது. டீப் சிக் வலைத்தளத்தின் எழுச்சி பற்றி தொழில்நுட்பத் துறையில் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

 தனக்கு போட்டியாக இருக்கும் மற்ற வலைத்தளங்கள் பயன்படுத்தக்கூடிய வளத்தை விட மிக சிறிய அளவில் வளத்தைக் கொண்டு இந்தப் புதிய வலைத்தளம் இயங்குகிறது. டீப் சிக் வலைத்தளத்தின் செயல்திறன் தற்போது கூகுள், ஓபன் ஏஐ போன்ற பெரிய தொழில்துறைகளின் பிரதான தொழில்நுட்ப பங்குகளை பாதிக்க செய்திருக்கிறது. குறிப்பாக மின்னியல் துறையில் இதன் தாக்கம் பெரியளவில் ஏற்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here