ஈப்போ:
வாகனங்களைப் பழுதுபார்க்கும் வேலைசெய்யும் ஆடவர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு 23 ஆண்டுகளாக சாலை வரி செலுத்தாமல் அதை ஓட்டிவந்திருக்கிறார்.
அந்த 61 வயது ஆடவர் நேற்று (பிப்ரவரி 5) அதிகாரிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த குட்டு வெளிப்பட்டது.
ஜாலான் சிலிபின்-ஈப்போவில் சாலைப் போக்குவரத்துப் பிரிவினர் அவரை கைது செய்ததுடன், அவரின் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
குறித்த ஆடவர், 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு சாலை வரி செலுத்தவில்லை என்று பேராக் சாலைப் போக்குவரத்துப் பிரிவுத் தலைவர் முகமட் யூசோஃப் அபுஸ்தான் தெரிவித்தார்.
அரம்பகட்ட விசாரணையில், குறித்த ஆடவர் பொதுவாக குடியிருப்புப் பகுதிகளில்தான் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததாகவும் முக்கிய சாலைகளில் ஓட்டுவதில்லை என்றும் கூறியதாக முகமட் யூசோஃப் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ஐ மீறியதற்காக குறித்த மோட்டார் சைக்கிளோட்டி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
























