அலாஸ்கா கடல் பனியில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க விமானம்; 10 பேர் பலி

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் உனலக்ளீட் விமான நிலையத்தில் இருந்து நோம் நகருக்கு செஸ்னா 208 பி என்ற விமானம் புறப்பட்டது. பெரிங் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் விமானி உள்பட 10 போ் பயணித்தனர்.

நார்டன் சவுண்ட் அருகே உள்ள மலைப்பகுதியில் சென்றபோது அங்கு கடும் பனிப்பொழிவு நிலவியது. எனவே விமானத்தை இயக்குவதில் விமானிக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அதற்குள் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்தது.

இதனையடுத்து கடைசியாக சிக்னல் கிடைத்த இடத்துக்கு மீட்பு படையினர் விரைந்தனர். பின்னர் மாயமான விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. மீட்பு படையினருடன் இணைந்து விமானத்தை தேடும் பணியில் உள்ளூர் மக்களும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மீட்புப்பணியாளர்கல் ஹெலிகாப்டர் மூலம் விமானத்தின் கடைசியாக சிக்னல் வந்த இடத்தில் தேடிக்கொண்டிருந்தபோது அலாஸ்கா கடல் பனியில் விழுந்து நொறுங்கி கிடந்ததை கண்டனர். இதனால் அவர்கள் இரண்டு மீட்பு நீச்சல் வீரர்களை கீழே இறக்கி விசாரணை நடத்தினர். அந்த விமானத்தில் பயணித்த 10 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 10 நாட்களில் அமெரிக்காவில் அடுத்தடுத்து 2 விமான விபத்து சம்பவங்கள் நடந்து 69 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here