மகாலட்சுமியின் அருள் கிடைக்க வேண்டும் என அனைவரும் விரும்பினாலும் மஹாலக்ஷ்மி தனக்கு விரும்புபவர்களிடத்தில் மட்டும் தான் தங்குவாள். அப்படி மகாலட்சுமி விருப்பமுடன், ஆசையாக வாசம் செய்யும் இடங்கள் பற்றி வாங்க தெரிந்து கொள்ளலாம்.
மகாலட்சுமிக்கு விருப்பமான இடங்களும், மனிதர்களும் :
* மஹாலஷ்மி எப்போதும் உறையும் இடமாக மஞ்சள், குங்குமம், கண்ணாடி, சீப்பு, பழ வகைகள், தேங்காய், வெற்றிலை, பாக்கு ஆகியன விளங்குகின்றன.
* பெண்கள் விரும்பி அணியும் வளையல், கருக மணி, பீங்கான் ஜாடி ஆகிய இடங்களிலும் நீங்காது இருக்கிறாள். அழகு, மனோதைரியம், வேலைத் திறன், தரும சிந்தனைமிக்கவர், கோபம் அற்றவர், பெரியவர்களுக்குப் பணிவிடை செய்பவர் ஆகியோரிடையே ஆண், பெண் வித்தியாசம் பாராமல் லட்சுமி தேவி இருக்கிறாள்.
* ஒரு காரியத்தை செய்தே தீர வேண்டும் என்ற வைராக்கியமும், செய்து முடிக்க முடியும் என்ற தைரியமும் உடையவர், தெய்வ பக்தி உள்ளவர், நன்றி உள்ளவர். ஐம்புலன்களை அடக்கியவர்களிடம் நித்திய வாசம் புரிகிறாள்.
* சுறுசுறுப்பு மிக்கவர், பெற்றோரை பேணிக் காப்பாற்றுபவர், அடக்கமுடையவர், அடுத்தவர் மனதை அறியும் திறமை உடையவர், காலத்தை வீணாக்காதவர் ஆகியோரிடம் திருமகள் இஷ்டப்பட்டு வசிக்கின்றாள்.
* உடல், மனம் சுத்தம் உள்ளவர், தியானம் செய்வதில் ஊக்கம் உள்ளவர்,பலனை எதிர் பார்க்காது பணிபுரிபவர்,மனம் சோர்ந்து போகாதவரிடம் லக்ஷ்மி என்றும் தங்குகிறாள்.
* சாமார்த்தியத்தை வளர்த்துக் கொள்பவரிடமும், சட்டென்று யோசித்து ஒருமுடிவு எடுத்து சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்பவரிடமும் ஆண், பெண் பாரபட்சமின்றி ஆசையாக லட்சுமி தேவி செல்கின்றாள்.
* தேவதைகள், பசுக்கள் பிரம்மஞானியர், சாதுக்கள், வேதம் தெரிந்தவர் எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துபவரிடம் நீங்காது வாழ்கிறாள்.
* கணவன், மனைவி அன்புடன் வாழும் குடும்பத்தில் நிரந்தரமாக வசிக்கின்றாள். கணவனை எதிர்த்துப் பேசாத குடும்பமே கோவில். கணவனும் பெரியவர்களும் தெய்வம் என்று நினைக்கும் பெண்ணை அவள் விரும்புகிறாள். வீடு வாசல், பாத்திரம் பண்டத்தை நித்தம் சுத்தப்படுத்தி சமைத்து உணவை வீணாக்காத பெண்ணிடம் நிரந்தரமாகத் தங்குகிறாள்.
* லக்ஷ்மி தேவியின் வெறுப்புக்குள்ளாவோர் சமைக்கப்பட்டதை சாப்பிடாமல் அல்லது விநியோகிக்காமல் வைத்திருந்து வீணாக்குபவரை அடியோடு லக்ஷ்மி வெறுக்கிறாள்.
* விடியற் காலையிலும் மாலையிலும் இல்லத்தின் வாயிலில் நீர் தெளித்து கோலமிட்டு விளக்கேற்றப்படும் வீட்டிற்கு அவசியம் வருகிறாள். இந்த இரு வேளைகளிலும் தவறாமல் தினமும் திருவிளக்கு ஏற்றி வைத்து மனமுவந்து தன்னை அழைக்கும் பெண்ணை லக்ஷ்மி ஒரு நாளும் உதாசீனம் செய்யமாட்டார்.
* அழகிய பெண், கற்புள்ளவள், ஆசாரம் உள்ளவள், எளிமையாக அலங்காரம் செய்து கொள்பவள் ஆகியோர் லக்ஷ்மிக்குப் பிரியமானவர்கள். தானியங்கள், தானியக் கிடங்குகள், தண்ணீர்க்குடம், தயிர், தேன், நெய் போன்ற போருட்களில் திருமகள் வாசம் செய்கிறாள்.
* யானை, அரசன், சிம்மாசனம், தாமரை குளம், எக்காலத்திலும் வற்றாத ஏரிகள், நதிகள், வாகனம், கன்னியர், ஆபரணங்கள், தாமரை முதலியவைகளில் அலைமகள் வசிக்கிறாள்.
* ஸ்ரீஹரியின் நாமம் எந்த இல்லத்தில் ஒலிக்கிறதோ அங்கு அவள் கட்டாயம் செல்வாள். விருந்தினரை உபசரிக்கும் குணம், மறை உணர்ந்தோரை மதிக்கும் குணம் கொண்டவர்களிடம் நீங்காது நிலைத்து நிற்கிறாள்.





















