செலாயாங்: இந்த வார தொடக்கத்தில் சின் சியூ டெய்லி செய்தித்தாளின் முதல் பக்கத்தில் தேசியக் கொடி தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக 42 பேரை சாட்சிகளாக போலீசார் அழைத்துள்ளனர். விசாரணையை முடிக்க இன்னும் அதிகமானோர் தங்கள் வாக்குமூலங்களை வழங்க வரவழைக்கப்படுவார்கள் என்று காவல்துறை துணைத் தலைவர் அயோப் கான் மைடின் பிச்சை கூறினார்.
விசாரணைகள் நடந்து வருகின்றன. மேலும் 40 போலீஸ் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 42 சாட்சிகளையும் (அவர்களின் வாக்குமூலங்களை வழங்க) நாங்கள் அழைத்துள்ளோம் என்று அவர் இங்கு ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
சின் சியூவின் தலைமை ஆசிரியர் சான் அவுன் குவாங் துணைத் தலைமை துணை ஆசிரியர் சாய் ஷ்வு சான் ஆகியோர் ஏப்ரல் 15 ஆம் தேதி வெளியான அதன் செய்தித்தாளில் பிறை நிலவு இல்லாமல் ஜலூர் ஜெமிலாங்கை சித்தரித்த படம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். விளக்கப்படத்தை வெளியிடுவதற்கு சான் பொறுப்பேற்றதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் படத்தின் பின்னணியில் கிராஃபிக் வடிவமைப்பாளராக சாய் இருந்தார்.
இந்த வழக்கு 1963 ஆம் ஆண்டு சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாட்டைத் தடுத்தல்) சட்டத்தின் பிரிவு 3(1)(c), 1984 ஆம் ஆண்டு அச்சு இயந்திரங்கள் மற்றும் வெளியீடுகள் சட்டத்தின் பிரிவு 4(1)(b) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
சின் சியூ இந்த பிழையை “தொழில்நுட்பத் தவறு” என்று கூறி உடனடியாக மன்னிப்பு கோரினார். மேலும் விசாரணைகள் முடியும் வரை சான், சாயை அவர்களின் பணிகளில் இருந்து காலவரையின்றி இடைநீக்கம் செய்தது. இருப்பினும், இந்தத் தவறு பொதுமக்களின் கண்டனத்திற்கு வழிவகுத்தது.அம்னோ மற்றும் பாஸ் இளைஞர் பிரிவுகள் இந்த விவகாரத்தில் சீன மொழி நாளிதழின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தின.
இருப்பினும், சுதந்திர பத்திரிகை உரிமை மையத் தலைவர் பி. ராமசாமி, இரண்டு மூத்த ஆசிரியர்களின் கைது நடவடிக்கையை விமர்சித்தார். இது பத்திரிகைகளுக்கு எதிரான கடுமையான போக்கைப் பிரதிபலிப்பதாகக் கூறினார்.