உண்மையான தைரியம் இருந்தால் பயங்கரவாதிகள் தலையை எடுங்கள்.. தேச விரோத வழக்கில் சிக்கிய பாடகி சவால்

போஜ்புரி நாட்டுப்புற பாடகி நேஹா சிங் ரத்தோர் மீது உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் தேசத்துரோகம் உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கவிஞர் அபய் பிரதாப் சிங்கின் புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த வாரம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஒரு குறிப்பிட்ட மத சமூகத்தை குறிவைத்து சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட பதிவுகள் நாட்டின் ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் என்று புகாரில் கூறப்பட்டது.

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் மரணம் குறித்து நேஹா கேள்வி எழுப்பியதாகவும், தேச விரோத அறிக்கைகளை வெளியிட்டதாகவும், இது அமைதி மற்றும் பொது ஒழுங்கை மீறும் வாய்ப்பை உருவாக்கியதாகவும் அபய் பிரதாப் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

நேஹா சிங் கூற்றுகள் பாகிஸ்தானில் வைரலாகிவிட்டன, அங்கு ஊடகங்கள் அவற்றை இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துகின்றன என்றும் அபய் பிரதாப் தெரிவித்தார்.

இந்நிலையில் தன் மீதான எஃப்.ஐ.ஆர் கூறியது புதிய வீடியோ ஒன்றை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, அரசு மீது நேஹா கடுமையான விமரசனங்களை முன்வைத்துள்ளார்.

நேஹா கூறியதாவது, பஹல்காம் தாக்குதலுக்கு அரசாங்கம் இதுவரை என்ன செய்துள்ளது? எனக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதன் மூலம் உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப அரசாங்கம் விரும்புகிறது.

உங்களுக்கு தைரியம் இருந்தால் பயங்கரவாதிகளின் தலைகளைக் கொண்டு வாருங்கள். உங்கள் தோல்விகளுக்கு என்னைக் குறை சொல்ல வேண்டிய அவசியமில்லை.

என்னுடைய கேள்விகளில் அரசாங்கத்திற்கு பிரச்சனைகள் உள்ளன. அதனால்தான் அவர்கள் நான் கேள்விகள் கேட்பதைத் தடுக்க விரும்புகிறார்கள்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இதுவரை நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதுதான் உண்மையான கேள்வி. எத்தனை பயங்கரவாதிகளின் தலைகளைக் கொண்டு வந்தீர்கள்? பாகிஸ்தானுக்குப் போய் பிரியாணி சாப்பிடவா நாடு உங்களைத் தேர்ந்தெடுத்தது? இதற்கு ஏதாவது பதில் இருக்கிறதா?

இந்த நாட்டு மக்களிடம் நீங்கள் இதற்குத்தானே வாக்களித்தீர்கள் என்று கேட்க விரும்புகிறேன். நீங்கள் கேள்வி கேட்டால், உங்களை தேசத்துரோகி என்றும் முத்திரை குத்துவார்கள்.

பாஜக என்பது நாடு அல்ல. பிரதமர் கடவுள் அல்ல.ஜனநாயகத்தில் விமர்சனங்கள் இருக்கும். கேள்விகள் நிச்சயமாகக் கேட்கப்படும். என்னுடைய கேள்விகளில் உங்களுக்கு இவ்வளவு பிரச்சனை இருந்தால், அதிகாரத்தை விட்டுவிட்டு எதிர்க்கட்சிக்கு வாருங்கள். அப்புறம் நான் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டேன்’ என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here