இந்தியா – பாகிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் மோதல் ஏற்பட்ட நிலையில், மலேசியா அந்த இரு நாடுகளுக்கும் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக இன்று அறிவித்தது. இதற்குப் பதிலளித்த பாகிஸ்தான், ஐந்து இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், தக்க பதிலடி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியா வருகை தர விரும்பும் மலேசியர்களுக்கு, குறிப்பாக பாகிஸ்தானுடன் எல்லை பகுதி உள்ள மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என நியூடெல்லியில் உள்ள மலேசிய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
விரைவில் செல்ல வேண்டிய அவசர தேவையில்லாத பயணங்களை தள்ளி வையுங்கள் என்று தூதரகம் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது. இது சுற்றுலா உள்ளிட்ட பயணங்களுக்கும் பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள மலேசிய தூதரகம், தற்போதைய நிலவரம் குறித்து உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், மலேசியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
தற்போதைய பதற்றமான சூழ்நிலையில், பாகிஸ்தான் செல்ல வேண்டிய அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என அந்த தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தானில் உள்ள மலேசியர்கள், தங்களது விவரங்களைத் தங்களது தூதரகங்களில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தொடர்பு எண்கள்:
இந்தியா – நியூடெல்லி மலேசிய தூதரகம்:
+90 11 2415 9300 / +90 11 2415 9311 / +90 85 9555 0564
மின்னஞ்சல்: [email protected]
பாகிஸ்தான் – இஸ்லாமாபாத் மலேசிய தூதரகம்:
+92 51 2072900 (ext 123 அல்லது 125)
மின்னஞ்சல்: [email protected]
இந்தியா இன்று 9 தீவிரவாத அமைப்புகள் இலக்குகளை தாக்கியதாக தெரிவித்துள்ளது. கடந்த மாதம் இந்து யாத்திரிகர்கள் மீது நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவத்துடன் இது தொடர்புடையதாக கூறப்படுகிறது. இதேவேளை, பாகிஸ்தான் இன்றைய தாக்குதலில் குறைந்தது 26 பேர் உயிரிழந்ததாகவும், இந்தியா இந்த பிராந்தியத்தில் தீவிர பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் குற்றம்சாட்டியுள்ளது.