ஷாஆலம்:
வரும் கட்சித் தேர்தலில் ஆதரவைப் பெற பண அரசியலைப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை கெஅடிலான் துணைத் தலைவர் வேட்பாளர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மறுத்தார்.
‘தற்போது வைரலாகி உள்ள காணொளி சிலாங்கூர் மாநிலத் தேர்தலுக்குப் பின்னர் பதிவு செய்யப்பட்டது. இதில் கூறப்பட்டுள்ள நன்கொடைகள் வாக்காளர்களுக்கானது இல்லை, மாறாக அவரது பிரச்சார ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் சேவை மையத்திற்கு வெளியே இருந்த எனது ஊழியர்களுக்கு நான் பணம் கொடுத்தேன். அந்த வீடியோவை கூர்ந்து கவனித்தால், கதவில் நம்பிக்கை கூட்டணி சின்னம் உள்ளது. அதில் என்ன தவறு இருக்கிறது’ என்று, தெக்குன் நேஷனல் அடிப்படை தொழில்முனைவோர் கருத்தரங்கை தொடக்கி வைத்த பின்னர் அவர் இவ்வாறு பேசினார்.
அத்தோடு இந்த காணொளி பரவுவதை நான் வண்மையாக கண்டிக்கிறேன். இது எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்ட ஒரு அவதூறு. இந்தப் பிரச்சினை நீண்ட காலத்திற்கு முன்பு நிகழ்ந்தது. தற்போது தேர்தல் சட்டங்களை மீறுவது குறித்து எந்தத் தகவலும் இல்லாத போதிலும், வேண்டுமென்றே மீண்டும் எழுப்பப்பட்டுள்ளது என்றார் அவர்.
இது ஒரு புதிய பிரச்சினை அல்ல. இது கட்சித் தேர்தல் காலம் என்பதால், பல விஷயங்கள் திரிக்கப்பட்டு தவறாகப் புரிந்து கொள்ளப்படும்.
இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் யார் என்பது அவர்களுக்கும் தெரியும் என்று அவர் சொன்னார்.





















