பிகேஆர் மத்திய தலைமைத் தேர்தல் முடிவுகள் நாளை இரவு 9 மணிக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நிறைவு உரைக்குப் பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று பிகேஆர் தேர்தல் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாலிஹா முஸ்தபா கூறினார். தற்போதைய சூழ்நிலையையும் தேர்தல் குழு கவனிக்கும். னால் பிரதமராகவும் இருக்கும் அன்வாரின் நிறைவு உரைக்குப் பிறகு அறிவிப்பை வெளியிடுவதே முன்னுரிமை என்று இன்று பெர்சாடா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற பிகேஆர் தேசிய காங்கிரஸ் 2024/2025 ஊடக சந்திப்பின் போது அவர் கூறினார்.
பிகேஆர் பொதுச் செயலாளர் ஃபுஸீயா சாலே, கட்சியின் தகவல் தலைவர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில், அதன் ஒழுங்குமுறை வாரியத் தலைவர் டத்தோ அஹ்மத் காசிம் ஆகியோரும் கலந்து கொண்டனர். இதற்கிடையில், கட்சியின் புதிய மத்திய தலைமைக் குழுவிற்கான அதிகாரப்பூர்வ விழா சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பெர்சாடாவில் நடைபெறும் என்று ஃபுஸியா கூறினார். இந்த விழாவில், முந்தைய மத்திய தலைமைத்துவ கவுன்சில், 2025–2028 காலகட்டத்திற்கான புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும். இந்த நிகழ்வு மேடையில் ஒரு குறியீட்டு, அதிகாரப்பூர்வ மாற்றத்தைக் காணும் என்று அவர் கூறினார்.
மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளுக்கான நேரடி வாக்களிப்பு பெர்ஜெயா வாட்டர்ஃபிரண்ட் ஹோட்டல், டாங்கா பே மாநாட்டு மையத்தில் நடைபெறும் என்று ஃபுஸியா விளக்கினார். சபா, சரவாக்கிலிருந்து வரும் கட்சி பிரதிநிதிகள் பெனாம்பாங்கில் உள்ள அனைத்துலக தொழில்நுட்ப மற்றும் வணிக மையம் (ITCC) மற்றும் கூச்சிங்கில் உள்ள பென்வியூ மாநாட்டு மையத்தில் தங்கள் நேரடி வாக்களிப்பார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
2025-2028 காலகட்டத்திற்கான கட்சியின் மத்திய அளவிலான தேர்தல்களில் மொத்தம் 251 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். இதில் கட்சியின் மத்திய தலைமைத்துவ கவுன்சிலுக்கு 104 பரிந்துரைகள், AMK (இளைஞர் தலைமைத்துவ கவுன்சில்) 85 வேட்பாளர்கள், பெண்கள் தலைமைத்துவ கவுன்சிலுக்கு 62 வேட்பாளர்கள் உள்ளனர் என்று அவர் கூறினார்.
புதிய பதவிக்காலத்திற்கான மத்திய தலைமைத்துவக் குழுவைத் தேர்ந்தெடுக்க மொத்தம் 22,809 பிரதிநிதிகள் வாக்களிப்பார்கள் என்று ஃபுஸியா கூறினார். இதில் 13,060 பேர் ஆன்லைன் மூலமாகவும் 9,829 பேர் நேரில் வாக்களிப்பார்கள் என்றும் கூறினார். அந்த எண்ணிக்கையில், 6,990 பிரதிநிதிகள் ஜோகூர் பாருவில் இருப்பார்கள். 1,120 மற்றும் 919 பேர் முறையே சபா மற்றும் சரவாக்கில் நேரடியாக வாக்களிப்பார்கள் என்று அவர் கூறினார்.
























