முருகனிடம் கேட்ட வரம் உடனடியாக கிடைக்க

எந்த குறை தீர வேண்டும் என்றாலும் முருகப் பெருமானிடம் முறையிட்டால் அந்த வேண்டுதல் உடனடியாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. முருகனுக்குரிய சஷ்டி, கிருத்திகை, செவ்வாய், வியாழன் கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் செய்து வழிபட்டால் நிச்சயம் அதற்கு விரைவில் பலன் கிடைக்கும்.

கலியுக தெய்வமாக பக்தர்களால் போற்றப்படும் முருகப் பெருமானிடம் எந்த வேண்டுதலை முன் வைத்து பக்தியுடன் வேண்டிக் கொண்டாலும் அது அப்படியே நிச்சயம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை மட்டுமாக இல்லாமல், பல பக்தர்களின் வாழ்வில் நிஜமாகவும் நடந்து வருகிறது. இதனால் தங்களின் குறை தீர முருகனை வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் சமீப காலமாக அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் அலை மோதுவதை காண முடிகிறது.

முருகனிடம் கேட்ட வரங்கள் உடனடியாக கிடைக்க செவ்வாய்கிழமையில் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய் கிரகத்திற்குரிய தெய்வமாக முருகப் பெருமான் கருதப்படுகிறார். இதனால் செவ்வாய் கிழமையில் செய்யப்படும் முருகப் பெருமானுக்குரிய வேண்டுதல், பிரார்த்தனை, வழிபாடுகள் நிச்சயம் நிறைவேறும்.

செவ்வாய் கிழமை காலையில் உங்களின் வீட்டில் உள்ள முருகன் படத்திற்கு முன்பாகவோ அல்லது அருகில் உள்ள முருகன் கோவிலுக்கோ சென்று இரண்டு நெய் விளக்குகள் ஏற்றி வையுங்கள். பிறகு அமைதியாக முருகன் முன் அமர்ந்து, மனதார முருகனை நினைத்துக் கொள்ளுங்கள்.

தொடர்ந்து “ஓம் செளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம் செளம் நமஹ”
என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். அவசர அவசரமாக சொல்லாமல், நிதானமாக, பொறுமையாக, சொல்லும் மந்திரத்தின் மீது கவனம் வைத்து சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை108 முறை சொல்லி முடித்த பிறகு, முருகப் பெருமானிடம் உங்களின் வேண்டுதல் அல்லது எது நடக்க வேண்டுமோ அதை சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

முருகப் பெருமான் உங்களின் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவார் என துளியும் சந்தேகம் இல்லாமல் நம்புங்கள். விரைவில் முருகனிடம் நீங்கள் கேட்ட வரம் நிச்சயம் கிடைக்கும். செவ்வாய் கிழமையில் வரும் செவ்வாய் ஹோரை நேரத்தில் இந்த மந்திரத்தை சொல்லுவதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மந்திரத்தை செவ்வாய் கிழமை தோறும் நீங்கள் சொல்ல துவங்கிய பிறகு உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்வதை காணலாம். உங்களின் வேண்டுதல் நிறைவேறுவதற்கான அறிகுறிகள் உங்களுக்கு தெரிய துவங்கும்.

செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவதால் முருகனின் அருளை விரைவில் பெற முடியும். வேலைக்காக வேண்டிக் கொள்பவர்கள் வியாழக்கிழமைகளில் வேலுக்கு பால் அபிஷேகம் செய்து வந்தால் விரைவில் நல்ல வேலை கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here