பல்கலைக்கழக மாணவி நிஷா கொலைச் சம்பவம் நீதி வேண்டும் குடும்பத்தார் உருக்கமான வேண்டுகோள்

கோலாலம்பூர்:

சைபர் ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் பல்கலைக்கழக மாணவி நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில் அவருடைய மரணத்திற்கு நீதி வேண்டும் என்று குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிக்கு முன் நிறுத்தப்படவேண்டும் என அந்த மாணவியின் குடும்பத்தார் வலியுறுத்தினர். நிஷா என்று அழைக்கப்படும் 20 வயதான மனிஷா பிரித் கோர் எனும் பல்கலைக்கழக மாணவி மரணம் தொடர்பில் அவருடைய குடும்பத்தார் மிகவும் அதிர்ச்சியில் இருப்பதாக அந்த மாணவியின் உறவினர் டத்தோ ராஜ்பால் சிங் தெரிவித்துள்ளார்.

நிஷாவுக்கு நேர்ந்தது பற்றி நாங்கள் மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்திருக்கின்றோம். கடுமையான பாதுகாப்பு இருக்க வேண்டிய ஒரு வீடமைப்புப் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது என்று அவர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஷம்சால்பூமி மண்டபத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

சம்பவம் நடந்தபோது அங்கிருந்த சிசிடிவி எனும் ரகசிய கேமரா செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. அந்த வீடமைப்பில் நிறுவனத்தின் பாதுகாப்பு தொடர்பாக சில பலவீனங்கள் இருந்ததாக எங்கள் குடும்பத்தாரிடம் தெரிவிக்க்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

மாணவர்களின் பாதுகாப்பு மீது பல்கலைக்கழக நிர்வாகத் தரப்பு இன்னும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
கவனக்குறைவால் ஓர் உயிர் பறிபோய்விட்டது. உண்மையில் இதனைத் தவிர்த்திருக்க முடியும் என்று அவர் சொன்னார்.

மாணவியின் மரணம் தொடர்பில் முழு விசாரணை நடத்தும் பொறுப்பை அரச மலேசிய போலீஸ் படையிடம் விட்டுவிடுகிறோம். அதிகாரிகள் வெளிப்படையான முறையில் விசாரணையை நடத்தி பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க விரைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
நாங்கள் எந்த ஆரூடத்தையும் கூற விரும்பவில்லை. ஆனால், எங்களுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும். நிஷாவுக்கு நீதி கிடைக்க வேண்டும். ஆகவே, அரச மலேசிய போலீஸ் படை நியாயமான முறையில் விசாரணை நடத்தி இதற்குப் பொறுப்பானவர்களை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

சைபர் ஜெயாவில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவி ஒருவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இறந்துகிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. அவர் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
அவருடன் தங்கியிருந்த மாணவி காலை 10.28 மணிக்கு வீடு திரும்பியபோதுதான் இந்த மாணவி தலையில் பலத்தக் காயத்துடன் இறந்துகிடந்தது தெரியவந்தது.

இதனிடையே பிள்ளையை இழந்து பரிதவிக்கும் குடும்பத்தாருக்கு மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி தம்முடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார். கூச்சிங்கில் உள்ள மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்ற அவர், நீதி நிலைநாட்டப்படும் என்று உறுதி அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here