இறக்குமதி வரிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறது இந்தோனேசியா

ஜகார்த்தா:

உலக நாடுகள் மீதான அமெரிக்க வரிவிதிப்பு வரும் ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே; கெடு முடிவுறப்போதை முன்னிட்டு இந்தோனேசியா இறக்குமதிக் கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் தளர்த்தவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல பொருள்கள், மூலப் பொருள்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் இந்தோனேசியா தளர்த்தவிருப்பதாக அதிகாரிகள் திங்கட்கிழமை (ஜூன் 30) குறிப்பிட்டனர். அந்நாட்டுடன் வர்த்தகம் செய்வதை எளிதாக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்தோனேசியா, தென்கிழக்காசிய வட்டாரத்தின் ஆகப் பெரிய பொருளியலாகும். இருந்தாலும், அதனுடன் வர்த்தகம் செய்யும்போது பல அதிகாரபூர்வக் கட்டங்களைக் (red tapes) கடக்க வேண்டியிருப்பதாக வர்த்தகர்கள் குறைகூறிவருகின்றனர்.

இதை வெளிநாட்டு வர்த்தகத் தடை விவகாரங்களுக்கான அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அண்மையில் சுட்டினார்.

கட்டுப்பாடுகள், விதிமுறைகள் தளர்த்தப்படுவதன்கீழ் இந்தோனேசியாவில் சில பொருள்களை ஏற்றுமதி செய்ய உரிமம் தேவை என்ற விதிமுறை விலக்கப்படும், தொழில்துறைகளுக்கான பிளாஸ்டிக், ரசாயனப் பொருள்கள் உட்பட சில மூலப் பொருள்கள் மீதான கட்டுப்பாடுகள் அகற்றப்படும். செய்தியாளர் கூட்டம் ஒன்றில் இந்தோனேசிய அதிகாரிகள் இத்தகவல்களை வெளியிட்டனர்.

தங்கள் கொள்கையில் இடம்பெறும் மாற்றங்களில் 10 வகை விளைபொருள்கள் (commodities) சம்பந்தப்படும் என்று இந்தோனேசிய பொருளியல் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் அயர்லாங்கா ஹர்டார்ட்டோ குறிப்பிட்டார். மாற்றங்கள் இரண்டு மாதங்களில் நடப்புக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க வரிவிதிப்பு தொடர்பில் வா‌ஷிங்டனுடனான பேச்சுவார்த்தைக்கும் இந்நடவடிக்கைக்கும் தொடர்புள்ளதா என்பதை அதிகாரிகள் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

“வர்த்தக உரிமங்களை வழங்குவது, அதிக காலம் நீடிக்கக்கூடிய அதிகாரபூர்வ நடைமுறைகளால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறதிசெய்யுமாறு அதிபர் (பிரபோவோ சுபியாந்தோ) எல்லா அமைச்சுகளுக்கும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்,” என்று இந்தோனேசிய அதிபர் ஆதரவு அமைச்சு (State Secretariat Ministry) அதிகாரியான சத்யா பக்தி பரிக்கெசிட் சொன்னார். அதோடு, செடிகளுக்கான உரம், வனங்கள் உள்ளிட்டவற்றுக்கான பிரிவுகளில் இடம்பெறும் பொருள்களுக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று இந்தோனேசிய வர்த்தக அமைச்சர் புடி சந்தோசோ கூறினார்.

மேலும், வரிவிதிப்பு தொடர்பில் வா‌ஷிங்டனுடனான பேச்சுவார்த்தையில் முக்கிய கனிமப் பொருள் திட்டத்தில் தங்களுடன் சேர்ந்து முதலீடு செய்ய இந்தோனேசியா, அமெரிக்காவுக்கு வாய்ப்பளித்துள்ளதாகவும் திரு அயர்லாங்கா தெரிவித்தார். செய்தியாளர்களுடன் தனியாகப் பேசியபோது பேசியபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here