பெட்டாலிங் ஜெயா,
பெர்சத்து இளைஞர் செயற்குழு உறுப்பினர் நைம் பிரண்டேஜ், நேற்று ஒருவர் தன்னை மரண மிரட்டலுக்கு உள்ளாக்கியதாகக் கூறி போலீசில் புகார் கொடுத்துள்ளார். தாம் அறிந்திராத ஒருவரால் தமக்கு அமிலம் வீச்சு செய்வதாக பிரட்டல் வந்துள்ளதாகவும், அதற்கான காரணம் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் நைம் தெரிவித்துள்ளார்.
“இது ஒரு அரசியல் தூண்டுதலாக இருக்கக்கூடும். சமூக ஊடகங்களில் நான் தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறேன்.ஆனால் இவ்விதமான மிரட்டல்கள் வந்தாலும் சமூக நலனுக்காக நான் குரல் கொடுப்பதை நிறுத்த வைக்க முடியாது,” என அவர் வலியுறுத்தினார்.
“எந்தவொரு மிரட்டலுக்கும் அல்லது அழுத்தங்களுக்கும் நான் ஒருபோதும் தலைவணங்க மாட்டேன். இந்த வன்முறையை ஊக்குவிக்கும் அரசியல் பண்பாட்டை தாழ்த்தி, விவேகமான அரசியலை மக்கள் ஆதரிக்க வேண்டும்” எனவும் அவர் கூறினார்.
நைம், 2022-இல் பெர்சத்துவை விட்டு PBM கட்சியில் இணைந்தார். பின்னர் முன்னாள் அமைச்சர் உட்பட 12 பேருடன் சேர்த்து PBM-இல் இருந்து வெளியேற்றப்பட்டதால், நவம்பர் மாதத்தில் மீண்டும் பெர்சத்துவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
























