ஜகார்த்தா,
இந்தோனேசியாவின் பாலி நீரிணையில் கடந்த புதன்கிழமை இரவு கவிழ்ந்த பயணியர் படகு சம்பவத்தில், மலேசியர் ஃபௌஸி அவாங் (வயது 55) என்பவர் காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் இருந்து ஒரு சுற்றுலா வேனில் பயணித்த அவர், மலேசியாவுக்கு திரும்புவதற்காக பாலி சர்வதேச விமான நிலையம் செல்லும் வழியில், பாலி நீரிணையில் KMP Tunu Pratama Jaya எனும் படகில் பயணித்தபோது அந்த படகு கவிழ்ந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜகார்த்தாவில் உள்ள மலேசியத் தூதரகம், இந்தோனேசிய வெளியுறவுத்துறையுடன் தொடர்பில் உள்ளதாகவும், காணாமல் போன நபரின் இருப்பிடத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினருடன் தூதரகம் தொடர்பு கொண்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மீட்பு முயற்சிகளில் 15 கப்பல்கள் பங்கேற்றுள்ளன என இந்தோனேசிய தேசிய தேடுதல் மற்றும் மீட்பு நிறுவனம் (Basarnas) தெரிவித்துள்ளது.





















