ஜோர்ஜ் டவுன்,
சுங்கை பகாப்பைச் சேர்ந்த 53 வயது நபர் ஒருவர், இணையத்தின் வழியாக விரைவான லாபத்தை வழங்குவதாக வாக்குறுதி அளித்த போலி முதலீட்டு மோசடியில் சிக்கி, RM500,000 இழந்தார் என போலிசார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் சிங்கப்பூரில் களஞ்சிய உதவியாளர் மேற்பார்வையாளராக முன்பு பணியாற்றியவர் என்றும், கடந்த மார்ச் 21ஆம் தேதி ஒரு Facebook விளம்பரத்தின் வழியாக “Silver Peak CP” என்ற முதலீட்டு வாய்ப்பை அறிந்ததாகக் கூறினார் என பினாங்கு துணை காவல்துறைத் தலைவர் அல்வி ஸைனல் அபிடின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் “லியான்” என அடையாளம் கூறி, விரைவான மற்றும் அதிக லாபத்தை அளிக்கும் முதலீடு என அந்த முதலீட்டு பயன்பாட்டை (app) அறிமுகப்படுத்தினார்.
இந்த வாய்ப்பில் கவரப்பட்ட அந்த நபர், மார்ச் 22 முதல் ஜூன் 24 வரை மொத்தம் 22 தடவைகள் மொத்தமாக ஆறு வங்கிக் கணக்குகளில் மூலம் RM500,000 வரை பணம் செலுத்தினார். அதன் பிறகு, அவரால் அந்த பயன்பாட்டை மீண்டும் அணுக முடியாத நிலை ஏற்பட்டது எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
எனவே போலி முதலீட்டு பயன்பாடுகள் மற்றும் இணைய மூல மோசடிகளுக்கு எதிராக பொலிஸார் பொதுமக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறு வலியுறுத்துகின்றனர்.
























