ஜோகூர் பாரு,
ஒரு நிறுவன மேலாளர், வாட்ஸ்அப் வழி பரவிய ஒரு இணைய வழி பங்குச் சந்தை முதலீட்டு மோசடியில் சிக்கி, மொத்தம் RM262,669 இழந்துள்ளார். 39 வயதுடைய அந்த நபர், Seri Alam காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்ததாக காவல் தலைவர் முகமட் ஸொஹைமி இஷாக் தெரிவித்தார்.
முதலீட்டில் வேகமான மற்றும் பெரும் வருமானம் கிடைக்கும் என வாட்ஸ்அப்பில் பரப்பப்பட்ட விளம்பரத்தை பார்த்த அவர், ஆர்வமுடன் ஏப்ரல் 25 முதல் ஜூலை 4 வரை, 16 முறை இரண்டு வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தினார், இதன் மொத்தம் RM262,669 ஆகும். பின்னர், முதலீட்டு லாபத்தை எடுத்துக்கொள்வதற்காக மேலும் பணம் செலுத்துமாறு கூறப்பட்டதென அவர் தெரிவித்துள்ளார்.
காலப்போக்கில் வருமானம் எதுவும் வராததை கவனித்த பிறகு, தன்னை ஏமாற்றியிருக்க வாய்ப்புள்ளதாக அவர் உணர்ந்தார். இந்த சம்பவம் குறித்து Semak Mule இல் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அவர் பணம் செலுத்திய வங்கி கணக்குகளில் ஒன்றுக்கு முன்பு மோசடி தொடர்பான புகாரும் இருந்தது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு தற்போது மலேசிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420-ன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது. பொதுமக்கள், வேகமான லாபத்தை வாக்குறுதி அளிக்கும் முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், முதலீடு செய்யும் முன் Semak Mule அல்லது Securities Commission Malaysia வழியாக நிறுவனம் உண்மையானதா என்பதை சரிபார்க்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





















