ஷா ஆலம்,
இன்று சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வானிலை, பெர்லிஸ், கெடா, பேராக், பகாங், நெகிரி செம்பிலான், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களிலும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
“மணிக்கு 20 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை ஒருமணிநேரம் அல்லது அதற்கு மேல் இடியுடன் பெய்யும் நிலை ஏற்பட்டால், இது தீவிர மழை எனக் கருதப்படும். அப்போது குறுகிய கால எச்சரிக்கையாக ஆறு மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் எச்சரிக்கை வழங்கப்படும்,” என வானிலைத் துறை தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் வானிலை தொடர்பான சரியான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்காக www.met.gov.my இணையதளம், சமூக ஊடகங்கள் மற்றும் myCuaca செயலியை பயன்படுத்துமாறு வானிலைத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.





















