தனியார் மருத்துவமனைகள் சில்லறை மருந்து விலைகளைக் காட்சிப்படுத்த வேண்டும் என்ற அரசாங்க உத்தரவை நீதித்துறை மறுஆய்வு செய்யக் கோரி ஏழு மருத்துவக் குழுக்களும் சபாவைச் சேர்ந்த ஒரு பொது மருத்துவரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இது அமைச்சரவை அதிகாரங்களை மீறுவதாகவும், தொழில்முறை மருத்துவப் பயிற்சிக்கு அச்சுறுத்தலாகவும் இருப்பதாக வாதிடுகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில், சபா தனியார் பயிற்சியாளர்கள் சங்கம் (APPS), மலேசிய மருத்துவ சங்கம் (MMA), செயல்பாட்டு, பல்துறை மருத்துவ முன்னேற்றத்திற்கான மலேசிய சங்கம் (Maafim), மலேசிய முஸ்லிம் மருத்துவர்களின் அமைப்பு (Perdim), மலேசிய தனியார் மருத்துவ பயிற்சியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FPMPAM), மலேசிய தனியார் பல் மருத்துவ பயிற்சியாளர்கள் சங்கம் (MPDPA), சரவாக் தனியார் மருத்துவ பயிற்சியாளர்கள் சங்கம் (SPMPS) மற்றும் டாக்டர் சைஃபுல்பஹ்ரி அஹ்மத் ஆகியோர் நீதித்துறை மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தனர்.
மே 1 முதல் அமலுக்கு வந்த விலைக் கட்டுப்பாடு, இலாப எதிர்ப்பு (மருந்துகளுக்கான விலை நிர்ணயம்) ஆணை 2025 இல், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமது அலி, சுகாதார அமைச்சர் டத்தோ ஸுல்கிஃப்ளி அஹ்மத், மத்திய அரசாங்கத்தை பிரதிவாதிகளாக அவர்கள் பெயரிட்டனர் என்று கோட் ப்ளூ செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சரின் சட்ட அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விண்ணப்பதாரர்கள் வாதிட்டனர். மேலும் சட்டத்தின் பிரிவு 10, விஷச் சட்டம் 1952 இன் பிரிவு 19 இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையின் போது வழங்கப்படும் மருந்துகளுக்குப் பொருந்தாது என்று வாதிட்டனர்.
தனியார் மருத்துவமனைகள், பல் மருத்துவ மனைகள் PCAPA ஆல் விவரிக்கப்பட்ட விதத்தில் “பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குவதில்லை” என்றும் அதன் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்றும் அவர்கள் கூறினர். மருத்துவம் உள்ளிட்ட பல் சிகிச்சை என்பது மருத்துவச் சட்டம், பல் மருத்துவச் சட்டம், விஷச் சட்டம், PHFSA மற்றும் தொடர்புடைய விதிமுறைகள் போன்ற சட்டங்களால் நிர்வகிக்கப்படும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட தொழில்முறை செயல்முறையாகும் என்று அவர்கள் கூறினர்.
சில்லறை விற்பனையைப் போன்ற வணிகப் பரிவர்த்தனை அல்ல, ஆலோசனை, நோயறிதலைத் தொடர்ந்து மருந்துகளை வழங்குவது சிகிச்சையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர்கள் வாதிட்டனர். மருந்து லேபிளிங் ஏற்கெனவே PHFSA விதிகளின் கீழ் கண்டிப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என்றும், இதற்கு கிளினிக்குகள், மருத்துவமனைகள் இரண்டிலும் சரியான லேபிளிங், சேமிப்பு, ஆவணங்கள் தேவை என்றும் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்டனர்.
சிகிச்சை செலவுகளை ஒழுங்குபடுத்த அல்லது லாபம் ஈட்டுவதைத் தடுக்க அரசாங்கம் விரும்பினால், அது PHFSA இன் பிரிவுகள் 106 மற்றும் 107 இன் கீழ் சுகாதார அமைச்சகம் மூலம் செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். இந்த உத்தரவு, மருந்து விநியோகத்தை சில்லறை விற்பனையாகக் கருதி, மருத்துவ செயல்முறையைத் தவிர்த்து, மருத்துவர்-நோயாளி உறவைத் தவறாக சித்தரிக்கிறது என்று அவர்கள் எச்சரித்தனர்.
அதிக செலவுகள், குறைந்த கொள்முதல் அளவுகள் காரணமாக மருந்தகச் சங்கிலிகளுடன் ஒப்பிட முடியாததால், சிறிய GP, சிறப்பு மருத்துவமனைகள் நியாயமற்ற முறையில் பாதகமாக இருக்கும் என்றும் குழுக்கள் தெரிவித்தன. இந்த உத்தரவு பின்னர் ரத்து செய்யப்பட்டால், வழக்குத் தொடரப்படுவதால் ஏற்படும் மீளமுடியாத தீங்குகளை மேற்கோள் காட்டி, உத்தரவை ரத்து செய்து, வழக்கின் முடிவு வரை அமலாக்கத்தைத் தடுத்து நிறுத்துமாறு அவர்கள் நீதிமன்றத்தைக் கோரினர்.









