கோலாலம்பூர்,
மனித உரிமை மீறல்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கூடிய தனிப்பட்ட மனித உரிமை தீர்ப்பாயம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு, 2025 அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும் என சட்டம் மற்றும் நிறுவனப் புதுப்பிப்பு துணை அமைச்சர் மு.குலசேகரன் தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் அமைச்சரின் கேள்வி நேரத்தில் பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அந்த ஆய்வுக்குழு ஜூன் மாதத்தில் அமைக்கப்பட்டதாகவும், இதில் Asean Intergovernmental Commission on Human Rights, சுஹாகாம், Bar Council, மற்றும் சட்ட பேராசிரியர்கள், அரசு முகவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியோரின் பிரதிநிதிகள் அடங்குவதாகவும் கூறினார்.
“இது மலேசியாவில் தற்போதுள்ள மனித உரிமை நடைமுறைகளை ஆராய்வதோடு, சர்வதேச மாதிரிகளையும் ஒப்பீடு செய்யும். மேலும், மனித உரிமை தீர்ப்பாயத்தின் வடிவமைப்பிற்கான முன்மாதிரிகளும் இதில் உள்ளடங்கும்,” என அவர் கூறினார்.
ஜூலை 9ஆம் தேதி, ஆய்வுக்குழுவின் முதல் கட்ட முடிவுகள் குறித்த ஒரு ஆலோசனையும் இடம்பெற்றது.
தற்போது தீர்ப்பாயத்தின் முழுமையான சட்ட அமைப்புகள் மற்றும் சட்ட உத்திகளைக் கூறுவதற்கான நிலை இல்லையென்றாலும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளை கையாளும் அதிகாரம் எதிர்கால தீர்ப்பாயத்திற்கு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.





















