புத்ராஜெயா,
பாதிக்கப்பட்ட மாணவி மரணத்தை அரசியல் ஆயுதமாக மாற்றக்கூடாது என்று பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று எச்சரித்தார்.
சமூக வலைதளங்களில் பரவுகின்ற தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மக்கள் மனதில் குழப்பம் ஏற்படுத்தும் விதமாக மாணவி ஜாரா கைரீனா மகாதிரின் மரணம் அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார் அவர்.
“ஒருவர் தன்னை மருத்துவ நிபுணர் எனக் கூறி, அந்த மாணவியின் உடற்கூறு அறிக்கையைப் போலி தகவல்களுடன் பகிர்ந்துள்ளார். இதனால் கோடிக்கணக்கான மக்களின் எண்ணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பலர் என்னிடம் நேரடியாகக் கூட விளக்கம் கேட்டனர்,” என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
“ஒரு உயிர் இழக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சம்பவத்தை வேறு ஒருவரை தாக்குவதற்கான அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவது தவறானது. உண்மையல்லாத விஷயங்களை கொண்டு மக்களை ஏமாற்றி, தூண்டுவது முற்றிலும் ஏற்க முடியாதது,” என்று அவர் வலியுறுத்தினார்.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற பிரதமருடன் மாதாந்திர சந்திப்பு நிகழ்வில் அவர் இந்த உரையை வழங்கினார். இந்நிகழ்வில் துணைப் பிரதமர் டத்தோ’ ஸ்ரீ படில்லா யூசுப் மற்றும் சட்டம், நிறுவன சீர்திருத்த அமைச்சர் டத்தோ’ ஸ்ரீ அசலினா ஒத்மான் சயீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.





















