ரஃபிஸியின் மனைவிக்கு மிரட்டல் செய்தி ; தொலைபேசி எண் வெளிநாட்டவர் பெயரில் பதிவு

கோலாலம்பூர்:

முன்னாள் பொருளாதார அமைச்சரும் பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஃபிஸி ரம்லியின் மனைவிக்கு அனுப்பப்பட்ட மிரட்டல் குறுஞ்செய்திகளுக்கு பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண், ஒரு வெளிநாட்டவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைத் தலைவர் காலிட் இஸ்மாயில் இன்று தெரிவித்தார்.

“அந்த நபரின் அடையாளத்தையும், அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதையும் கண்டறிய காவல்துறை தொடர்ந்து முயற்சித்து வருகிறது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த வாரம், ரஃபிஸி தனது மனைவிக்கு தெரியாத எண்ணிலிருந்து இரண்டு மிரட்டல் குறுஞ்செய்திகள் வந்ததாக வெளிப்படுத்தியிருந்தார். அவரது கூற்றுப்படி, முதல் செய்தியில் “அமைதியாக இரு. நீங்கள் தொடர்ந்தால், எய்ட்ஸ்” என்ற எச்சரிக்கை இருந்தது. சில மணி நேரங்களுக்கு பிறகு, அதே செய்தியுடன் மூன்று சிரிஞ்ச் எமோஜிகளும் அனுப்பப்பட்டன.

இந்த சம்பவத்திற்கு முன், ஆகஸ்ட் 13 அன்று, புத்ராஜெயாவில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் ரஃபிஸியின் 12 வயது மகன் மதியம் 2 மணியளவில் இரண்டு ஆண்களால் இழுத்துச் செல்லப்பட்டு, சிரிஞ்சால் குத்தப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் தற்போது சிகிச்சை மற்றும் பரிசோதனையில் உள்ளார்.

“இதுவரை, குடும்பத்தினர் மற்றும் ஓட்டுநரைச் சேர்த்து மொத்தம் 19 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன,” என்று காலிட் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் தாக்குதலைத் தொடர்ந்து ரஃபிஸி அடையாளம் காட்டிய சில நபர்கள் குறித்து கேட்கப்பட்டபோது, “அது என் அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல; எனவே எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here