மாநில அரசுகள் சிறு வியாபாரிகளை புறக்கணிக்கக் கூடாது – பிரதமர்

கோலாலம்பூர்:

சிறு வியாபாரிகள், குறிப்பாக மலாய் விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளின் நலன்களை மாநில அரசுகள் புறக்கணிக்கக் கூடாது என்று பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

அத்தோடு மாநிலங்களில் உள்ள உள்ளூராட்சி அதிகாரிகள் (PBT) கோலாலம்பூர் கூட்டாட்சி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“அதனால் தான் நான் உள்ளூராட்சி சபைகளையும் மாநில அரசுகளையும் கோலாலம்பூரை எடுத்துக்காட்டாகக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

“குவந்தான், தெமெர்லோ, கோத்தா பாரு அல்லது அலோர் ஸ்டார் ஆகிய நகரங்களின் பெருமை வெறும் புதிய விற்பனை நிலையங்களால் மட்டுமல்ல, மாநில அரசுகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் வழங்கும் அடிப்படை வசதிகள், சுத்தம், கடைக்கூடங்கள், விற்பனை மையங்கள் மற்றும் வியாபார இடங்களின் மேம்பாட்டினாலும் மதிப்பிடப்பட வேண்டும்,” என்று, நேற்று நடந்த மலாய் விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு (GPPPKMM) 50ஆம் ஆண்டு கொண்டாட்ட விருந்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அன்வார் மேலும் கூறுகையில், கோலாலம்பூர் நகர மன்றம் (DBKL) 60–70 கடைக்கூடங்களை புதுப்பிப்பதற்கும், மலாய் விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்காக வசதியான உணவகம் ஒன்றையும் அமைப்பதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

“அவை சிறியதாக தோன்றினாலும், மலாய் வியாபாரிகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. மக்களின் 80 சதவீதம் சில்லறை கடைகளில் தான் பொருட்கள் வாங்குகிறார்கள். ஆகவே, தேசிய வளர்ச்சி கொள்கைகளை அமைக்கும் போது சிறு வணிகர்களை புறக்கணிப்பது முறையல்ல,” என்று அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், பிரதமர் GPPPKMM-க்கு RM500,000 ஒதுக்கீட்டையும் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here