கோலாலம்பூர்:
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் (Cairo), சமைக்கப்படாத மூன்று பாக்கெட் இன்ஸ்டன்ட் நூடுல்ஸை (instant noodles) சாப்பிட்டதால், ஹம்சா எனும் 13 வயதுச் சிறுவன் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
குர்ஆன் வகுப்பிலிருந்து வீடு திரும்பிய சிறுவன், நூடுல்ஸைச் சாப்பிட்ட பிறகு, வாந்தி எடுத்தும், கடுமையான வயிற்று வலியுடனும் அவதிப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே, ஆம்புலன்சில் உயிரிழந்தான்.
இந்தச் சம்பவம் குறித்து, அதிகாரிகள் முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். நூடுல்ஸை விற்ற கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார், அதுமட்டுமின்றி, நூடுல்ஸ் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சிறுவனின் உடல், உடற்கூறு ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப அறிக்கைகளின்படி, அவனது உடலில் போதைப்பொருட்களோ அல்லது தடை செய்யப்பட்ட பொருட்களோ கண்டறியப்படவில்லை.
இந்தச் சம்பவம், தற்போது இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளது. அதிகப்படியான இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிடுவது, செரிமானப் பிரச்சினைகள், ஒவ்வாமை, உறுப்புக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் ஈராக்கிலும், இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




















