கோலாலம்பூர்:
கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடத்தப்பட்ட நாடு தழுவிய போலீஸ் சோதனைகளில், விருந்தினர் உறவு அதிகாரிகளாக (GRO) பணியாற்றியதாக சந்தேகிக்கப்படும் 215 வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
“ஓப் நோடா” என்ற பெயரில் நடைபெற்ற இந்த நடவடிக்கையின் போது 87 பொழுதுபோக்கு நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டன. அதில் 66 நிறுவங்கள் செல்லுபடியாகும் உரிமம் இன்றி இயங்கியதாக கண்டறியப்பட்டன என்று, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்ததார்.
கைது செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டு விலைமாதுக்களுடன் சேர்ந்து வளாக உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் அடங்குவதாக அவர் கூறினார்.
வெளிநாட்டு பெண்களில் 77 பேர் தாய்லாந்து, 65 பேர் வியட்நாம், 35 பேர் இந்தோனேசியா, 28 பேர் மியன்மார், 5 பேர் சீனா, 4 பேர் கம்போடியா மற்றும் 2 பேர் லாவோஸ் நாட்டவர்கள் எனறும், கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 38 வயதுக்குள் உள்ளவர்கள் என்றும் கூறிய அவர், கைது செய்யப்பட்ட அனைவரும் ஆவண சரிபார்ப்பு மற்றும் மேலதிக விசாரணைக்காக மாவட்ட காவல் தலைமையகங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றார்.
இந்த வழக்குகள் குடிநுழைவுச் சட்டம் 1959/63, கலால் சட்டம் 1976 உட்பட பல சட்ட பிரிவுகளின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக, மாநில பொழுதுபோக்கு சட்டங்களின் கீழும் விசாரணை செய்யப்படும் என போலீஸ் தெரிவித்துள்ளது.
“அனைத்து பொழுதுபோக்கு நிலையங்களும் உரிமத் தேவைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய காவல்துறை இதுபோன்ற சோதனைகளை தொடர்ந்து தீவிரமாக நடத்தும்,” என டத்தோ எம். குமார் உறுதியளித்தார்.
தொடர்புடைய தகவல்களை போலீசாருக்கு பொதுமக்கள் வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
























