RM2.1 மில்லியனுக்கும் மேலான போலி வரவு செலவு கணக்குகள்: அறக்கட்டளையின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் அரசு சாரா அமைப்பின் தலைவர் கைது!
கோலாலம்பூர்: ஒரு வங்கி நிறுவனத்திற்குச் சொந்தமான அறக்கட்டளையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், ஓர் அரசு சாரா அமைப்பின் (NGO) தலைவரும், RM2.1 மில்லியனுக்கும் மேலான போலி வரவு செலவு கணக்குகளைச் சமர்ப்பித்த குற்றத்திற்காக, ஐந்து நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
30 மற்றும் 50 வயதுடைய அவ்இருவரும், நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமையகத்தில், வாக்குமூலம் அளித்த பிறகு, கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் இணைந்து, செயல்படுத்தப்படாத, சுகாதார உதவித் திட்டத்திற்குப் பணம் பெறுவதற்காக, போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தது தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு, 2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 18-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.





















