ஈப்போவிலுள்ள ஒரு வணிக வளாகத்தில் குண்டு வெடிப்பு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு ஆண்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். சம்பவம் நேற்று அதிகாலை 4.58 மணியளவில் Panorama Lapangan Perdana பகுதியில் நிகழ்ந்தது.
இந்த வெடிப்பால் இரண்டு கடைகள் சேதமடைந்தன. எனினும் உயிர்ச்சேதம் அல்லது காயம் எதுவும் பதிவாகவில்லை என்று ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் அபாங் ஸைனல் அபிடின் அபாங் அஹ்மத் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான தகவலை 43 வயது பெண் ஒருவர் போலீசாருக்கு தெரிவித்தார். சம்பந்தப்பட்ட வளாகத்தின் சிசிடிவி காட்சிகளில் இரண்டு ஆண்கள் மோட்டார் சைக்கிளில் வந்து, கடை முன்பு ஒரு பொருளை விட்டு சென்றது பதிவாகியுள்ளது.
பின்னர் மேற்கொண்ட ஆய்வில், குறைந்த தீவிரத்தன்மை கொண்ட வெடிபொருள் பயன்படுத்தப்பட்டதாகவும் பேராக் மாநில தலைமையக ஆயுதப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
வெடிப்பால் ரோலர் ஷட்டர் கதவு, கடை முன்புற தரை சேதமடைந்தன. அடுத்தடுத்த கடையில் உள்ள பெயர்ப் பலகை மற்றும் சுவரும் சிறிதளவு சேதமடைந்தன.
“பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் குறைந்த சக்தி கொண்ட வகையைச் சேர்ந்தது. இது உயிர்ச்சேதம் ஏற்படுத்த அல்லாது, அச்சுறுத்தி சேதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது,” என்று அவர் கூறினார்.





















