கோலாலம்பூர்:
கடந்த புதன்கிழமை, செராஸ், பத்து 9-இல், தெரு நாய் ஒன்றால் கடிக்கப்பட்டு, தலையில் படுகாயமடைந்த ஆறு வயதுச் சிறுவனுக்கு இவ்வாரம் புதன்கிழமை அன்று இரண்டாவது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
தற்போது, புத்ராஜெயா மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் அச்சிறுவனின் நிலை, சீராக உள்ளது என்று, காஜாங் காவல்துறைத் தலைவர், ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோப் (ACP Naazron Abdul Yusof) தெரிவித்தார்.
இதனிடையே, வெறிநோய் தொற்று உள்ளதா என, மருத்துவமனை பரிசோதனைகளை நடத்தியுள்ளதுடன், வெறிநோய் எதிர்ப்பு மருந்துகளையும் வழங்கி, முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும், அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நாய், தெரு நாய் தான் என்பதை, காஜாங் மாநகர் மன்றம் (MPKj) உறுதிப்படுத்தியுள்ளது.
முன்பதாக, சிறுவன், தனது வீட்டிற்கு அருகில், சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தபோது, நாய் ஒன்று, அவனைக் கடித்த காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.




















