கோலா நெருஸ்:
ஜாலான் பண்டார் பாருவில் நடந்த சம்பவத்தில், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி, நிறுத்துமாறு கூறியபோது ரோந்து காரை மோதியதற்காக 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
கோலா திரெங்கானு காவல்துறை துணைத் தலைவர் வான் முகமது ஜாக்கி வான் இஸ்மாயில் தெரிவித்ததாவது, நேற்றுமாலை 6.30 மணியளவில், கோலா திரெங்கானு காவல் தலைமையகத்தைச் சேர்ந்த இரண்டு மொபைல் ரோந்து அதிகாரிகள், சாம்பல் நிற புரோட்டான் வீரா காரை சந்தேகத்திற்கிடமான முறையில் ஓட்டிச் செல்வதை கவனித்தனர்.
அவர்கள் ஓட்டுநரை நிறுத்தச் சொன்னபோதும், சந்தேக நபர் வேகமாகச் சென்று, போலீசாரின் அழைப்புகளைப் புறக்கணித்ததுடன், ரோந்து காரை மோதியும், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டினார். பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகாரிகள் துப்பாக்கியைக் காட்டி கடுமையான எச்சரிக்கை விடுத்தனர். பின்னர், அவர் வளைத்துப் பிடிக்கப்பட்டார்.
சோதனையில், சந்தேக நபர் 16 வயது பள்ளி மாணவர் என்றும், அவர் தனது சகோதரரின் காரை அனுமதியின்றி ஓட்டிச் சென்றதாகவும் தெரியவந்தது. உரிமம் இல்லாமல் ஓட்டியதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக போலீசார் உறுதிப்படுத்தினர்.
பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு, அந்த சிறுவனுக்கு கடுமையான எச்சரிக்கையும், மீண்டும் இத்தகைய குற்றத்தை செய்யக்கூடாது என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த வழக்கு, ஒரு அரசு ஊழியரை தங்கள் கடமையை நிறைவேற்றுவதில் தடுத்தது எனக் கருதப்பட்டதால், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 186 இன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.




























