கூட்டுறவு நிறுவனங்கள் நிதி, சந்தைப்படுத்தல் ஆகியவற்றிலும் டிஜிட்டல் மயமாக்கலை ஏற்றுக்கொள்ள வேண்டும்: ரமணன்

புத்ரஜெயா: கூட்டுறவு நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாக்கலை  நிதி விஷயங்களில் மட்டுமல்லாமல்  அவற்றின் தயாரிப்புகள் சேவைகளை சந்தைப்படுத்துவதிலும் பயன்படுத்த வேண்டும் என்று டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார். உலகம் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில்,  விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சமூக அடிப்படையிலான சுற்றுலா மூலம் நிலையான முயற்சிகளை வழிநடத்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்பு உள்ளது என்று  தொழில்முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவுத் துறை துணை  அமைச்சர் கூறினார்.

பரஸ்பர நன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் கூட்டுறவு வணிக மாதிரி, இந்த முயற்சிகளை இயக்குவதற்கு மிகவும் பொருத்தமானதாக அமைகிறது  என்று புதன்கிழமை (செப்டம்பர் 17) நடைபெற்ற Jom@Coop 2025 திட்டத்தின் நிறைவு விழாவில் அவர் கூறினார். கூட்டுறவு நிறுவனங்கள் வளரவும் செழிக்கவும் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளன. ஆனால் எப்போதும் மாறிவரும் உலகில் பொருத்தமானதாக இருக்க மாற்றத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்று ரமணன் மேலும் கூறினார்.

கூட்டுறவு நிறுவனங்கள் மீள்தன்மை கொண்டவை. நெருக்கடிகளின் போது பொருளாதார, சமூக இலக்குகளை சமநிலைப்படுத்துகின்றன என்பதை வரலாறு காட்டுகிறது என்று அவர் கூறினார். கூட்டுறவு நிறுவனங்கள் அவற்றின் உறுப்பினர்களுக்கு தெளிவான,  ஊக்கமளிக்கும் வகையில் திட்டங்கள் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அது புதிய சவால்களை எதிர்கொள்ள உதவும். இந்த தொலைநோக்குப் பார்வை மாறும் தன்மையுடையதாகவும், மாறிவரும் நிலப்பரப்புடன் ஒத்துப்போகும் வகையில் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று ரமணன் கூறினார்.

கூட்டுறவு நிறுவனங்கள் நல்லாட்சியின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். அவர்களின் சொத்துக்கள் மற்றும் செல்வத்தைப் பாதுகாக்க திறமையான மற்றும் நம்பகமான மேலாண்மை அவசியம் என்பதைக் குறிப்பிட்டார். கூட்டுறவு நிறுவனங்களின் திசையை அனைவரும் புரிந்துகொள்வதையும் பொதுவான இலக்குகளை நோக்கிச் செயல்படுவதையும் உறுதி செய்வதற்குத் தலைமைக்கும் உறுப்பினர்களுக்கும் இடையே தெளிவான தொடர்பு மிக முக்கியமானது என்று அவர் கூறினார்.

கூட்டுறவு நிறுவனங்கள் 13ஆவது மலேசியா திட்டத்தை ஆதரிப்பது மட்டுமல்லாமல், பசுமைப் பொருளாதாரம், டிஜிட்டல் மயமாக்கல், உணவுப் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் மடானி பொருளாதார நிகழ்ச்சி நிரலில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் ரமணன் மேலும் கூறினார். நிகழ்வுக்குப் பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில், நாட்டில் தற்போது 16,000 பதிவுசெய்யப்பட்ட கூட்டுறவு நிறுவனங்கள் இருப்பதாகவும் அதில் 2,000 செயல்படாதவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ரமணன் தெரிவித்தார். மலேசியாவில் எங்களிடம் பல கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளன, ஆனால் கூட்டுறவுகள் மிகவும் முன்னேறிய இந்தியாவில் உள்ளவற்றுடன் ஒப்பிடும்போது நாங்கள் பின்தங்கியுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.

5,500க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் Jom@Coop 2025 நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர், இதில் மன்றங்கள், அறிவுப் பகிர்வு அமர்வுகள், தயாரிப்பு கண்காட்சிகள், கூட்டுறவுகளின் வெற்றிக் கதைகள் ஆகியவை அடங்கும். இது புதுமையான, கூட்டுறவு சீர்திருத்தங்களுக்கான தளத்தை உருவாக்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here