கோலாலம்பூர்,
பூச்சோங் ஆயர் இத்தாம் காட்டு பாதுகாப்புப் பகுதிக்குள் செல்லுபடியாகும் அனுமதி இன்றி நுழைந்த 75 பேர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ‘Ops Jejak 2 ’ நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.
இன்று காலை 11 மணியளவில், சிலாங்கூர் வனத்துறை அதிகாரிகள், சிலாங்கூர் தெங்கா வன மாவட்ட அலுவலகம், புத்ரா மலேசியா பல்கலைக்கழகம் (UPM) மற்றும் பூச்சோங் ஜெயா போலீஸ் நிலையத்தின் உதவியுடன் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி முகமட் ஃபாரிட் அஹ்மட் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் புக்கிட் வவாசான் வழியாக அந்த நிரந்தர காட்டு பாதுகாப்புப் பகுதிக்குள் நுழைந்துள்ளனர். 1984ஆம் ஆண்டு தேசிய வனச்சட்டம் (பயன்பாடு) மற்றும் 1985 விதிகளுக்கு புறம்பாக இந்நுழைவு நடைபெற்றுள்ளது. இப்பகுதி UPM வனத்துறை பிரிவின் கீழ் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான பயன்பாட்டிற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் செர்டாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, பின்னர் வனத்துறை அதிகாரிகளால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார் .
முகமது ஃபாரிட், பொதுமக்களுக்கு நினைவூட்டியதாவது, 2012ஆம் ஆண்டு செலாங்கூர் மாநில நிர்வாக சபையால் அங்கீகரிக்கப்பட்ட 2.8 கிலோமீட்டர் சுற்றுவட்ட பாதையான ‘ட்ரெயில் 1’ மட்டும் பொதுமக்களின் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.


















