கோம்பாக்,
வாகனத்தில் சிறார்களுக்கான நாற்காலி இல்லாததுதான் புக்கிட் காஜாங் டோல் சாவடியில் 4 வாகனங்களை உட்படுத்திய விபத்தில் 12 மாத ஆண் குழந்தை உயிரிழந்ததற்கு காரணம் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
அச்சமயத்தில் அந்த குழந்தை சிறார்களுக்கான சிறப்பு நாற்காலியில் அமர்த்தபடவில்லை. மாறாக பெரியவர் அமரும் வழக்கமான நாற்காலியில் தான் அமர்த்தபட்டிருந்தது. எனவேதான் வாகனங்கள் மோதிக் கொண்டதும் அந்த குழந்தை நாற்காலியிருந்து தூக்கி எறியப்பட்டு வாகன இடுக்குகளில் சிக்கிக் கொண்டதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார் அவர்.
முன்னதாக சனிக்கிழமை காலை புக்கிட் காஜாங் டோல் சாவடியில் 4 வாகனங்களை உட்படுத்திய விபத்தில் 12 மாத ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் 8 பேர் காயமுற்றனர். இந்த விபத்தில் 3 டன் லாரி ஒன்று, பொதுப் பணி இலாகாவிற்கு சொந்தமான 4 சக்கர பெரு வாகனம் ஒன்று, 2 கார்கள் மோதிக் கொண்டன.
அந்த லாரி மற்ற வாகனங்களை மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.
இதனிடையே இந்த விவகாரத்தில் பெற்றொர் உட்பட யாரையும் நான் குறை கூறவில்லை. ஆனாலும் வாகனத்தில் உள்ள ஒவ்வொரு பாதுகாப்பு அம்சமும் முக்கியமே என்றும் அமைச்சர் நினைவுறுத்தினார்.



















