கெடாவில் வெள்ளநிலைமை மேம்பட்டது ; ஒரு தற்காலிக நிவாரண மையம் மூடப்பட்டது

அலோர் ஸ்டார்:

கெடாவில் வெள்ளநிலை மேம்பாடு கண்டுள்ளது. இதன் காரணமாக, இன்று ஒரு தற்காலிக நிவாரண மையம் (PPS) மூடப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட போக்கோக் சேனா பன்முகத் திடல் PPS இன்று காலை 11.30 மணிக்கு மூடப்பட்டது என்று, கெடா சிவில் பாதுகாப்புப் படை (APM) துணை இயக்குநர் மேஜர் (PA) முகமட் சுஹைமி முஹமட் ஸைன் தெரிவித்தார்.

இதேவேளை, 40 குடும்பங்களைச் சேர்ந்த 140 பேர் இன்னும் செக்கோலா கெபாங்க்சான் (SK) லங்கார் PPS-ல் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முக்கிம் லங்கார்/லிம்பொங் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இதில் காம்போங் ஆலோர் ராஜா, மகாம் திராஜா, லிம்பொங், ஆலோர் செடோல், பொண்டோக் ஹாஜி அஹ்மத், போக்கோக் அசாம், தஞ்சோங் இங்கெரிஸ், ஆலோர் பெசார், பாகர் ஐர் மற்றும் பொண்டோக் ஷெய்க் ஆகிய கிராம மக்கள் அடங்குவர் என்று அவர் தெரிவித்தார்.

காலையில் சிறிது மழை பெய்தபோதிலும், இன்றைய வானிலை பொதுவாக நல்லதாக இருந்தது என்று அவர் மேலும் கூறினார்.

“சுங்கை பெந்தோங் ஆற்றின் நீர்மட்டம் 2.74 மீட்டராக உயர்ந்துள்ளது. இது 2.7 மீட்டர் அபாய நிலையைத் தாண்டியுள்ளது. அதேவேளை, சுங்கை கெடா (கோத்தா ஸ்டார் நெடுஞ்சாலைப் பாலம் பகுதியில்) 1.93 மீட்டராக இருந்தது; இது எச்சரிக்கை அளவான 1.8 மீட்டரைக் கடந்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here