கோல்கட்டா: ”மீண்டும் இந்தியாவுக்கு வருவதில் மகிழ்ச்சி,” என, அர்ஜென்டினாவின் மெஸ்ஸி தெரிவித்தார்.
அர்ஜென்டினா நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி 38. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் ‘பிபா’ உலக கோப்பை வென்றது. வரும் டிசம்பரில் இந்தியா வரவுள்ளார். கோல்கட்டா, ஆமதாபாத், மும்பை, டில்லி என நான்கு நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெஸ்ஸி, 2வது முறையாக இந்தியா வரவுள்ளார். இதற்கு முன் 2011, ஆக. 31ல் கோல்கட்டா வந்த மெஸ்ஸி, சால்ட் லேக் மைதானத்தில் நடந்த வெனிசுலா அணிக்கு எதிரான கண்காட்சி போட்டியில் விளையாடினார். இதில் மெஸ்சி அணி 1–0 என வெற்றி பெற்றது.
மெஸ்ஸி கூறுகையில், ”மீண்டும் இந்தியாவுக்கு செல்ல இருப்பது பெருமையாக உள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன் நான் அங்கு சென்ற போது ரசிகர்கள் வழங்கிய அன்பு, இனிமையான நிகழ்வுகள் என்றும் மறக்க முடியாதவை. கால்பந்து தேசம் இந்தியா. இளம் தலைமுறை ரசிகர்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்றார்.








