கோலாலம்பூர்:
நாடு முழுவதும் இதுவரை சுமார் 6,000 பள்ளி மாணவர்கள் இன்ஃப்ளூயன்ஸா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பல பள்ளிகள் மாவட்ட சுகாதார அலுவலகங்களின் ஆலோசனையின் பேரில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கல்வி இயக்குநர் டாக்டர் முஹம்மத் அசாம் அஹ்மத் கூறுகையில், “மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து பள்ளி ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சுகாதார அமைச்சு வகுத்துள்ள நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என்றார்.
அவர் மேலும், மாணவர்களிடையே இன்ஃப்ளூயன்ஸா தொற்று பரவுவதைத் தடுக்க, பள்ளிகளில் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடைப்பிடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“கோவிட்-19 காலத்தில் பெற்ற அனுபவம், இத்தகைய நோய்களை சமாளிக்க எங்களுக்கு வலுவான வழிகாட்டுதலாக உள்ளது,” என்று அவர் கூறினார்.
பள்ளி ஊழியர்கள் முகமூடிகளை அணிவதை ஊக்குவிக்கவும், மாணவர்கள் குழு செயல்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.




















