ஜெய்சால்மேர் (ராஜஸ்தான்):
ராஜஸ்தானில் ஏற்பட்ட துயரகரமான சாலை விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 16 பேர் கடுமையாகக் காயமடைந்துள்ளனர்.
தகவல்படி, ஜெய்சால்மேர் மாவட்டம் தையாத் பகுதியில் உள்ள ராணுவ நிலையம் அருகே 57 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தீ வேகமாக பரவியதில், பேருந்தில் இருந்த மூன்று பெண்கள், மூன்று குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டு, சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
அதேபோல் அருகிலுள்ள ராணுவப் போர் அருங்காட்சியகத்தில் பணியாற்றும் ராணுவ வீரர்களும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.
தீ விபத்திற்கான காரணம் இன்னும் உறுதியாக தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





















