கோலாலம்பூர்:
வடக்கு–தெற்கு விரைவுச்சாலையின் (PLUS) வடக்கு நோக்கி செல்லும் சாலையின் KM256 பகுதியில் மெனோரா சுரங்கப்பாதை அருகே ஒரு கொள்கலன் லோரி விபத்துக்குள்ளானதையடுத்து, இன்று காலை முதல் கோலா கங்சார் வரை சுமார் ஏழு கிலோமீட்டர் நீளமான கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விபத்து காலை 7.56 மணியளவில் நிகழ்ந்தது, அதன் விளைவாக வடக்கு நோக்கி செல்லும் அனைத்து பாதைகளும் தற்காலிகமாக தடுக்கப்பட்டன. இதனால், நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் குவிந்த நிலையில், அப்பகுதியில் நீண்டநேர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால், வடக்கு நோக்கி KM256.8 இல் விபத்துக்குள்ளான கொள்கலன் லோரியை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
நெரிசலை குறைப்பதற்காக, KM255.8 முதல் KM257.3 வரை தெற்கு நோக்கி செல்லும் பாதையில் “கான்ட்ரா லேன்” (contra flow) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக PLUS அறிவித்துள்ளது. அதே நேரத்தில், தெற்கு நோக்கி வலது பக்கப் பாதை திசைதிருப்பல் மற்றும் சுத்தப்படுத்தும் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது.
பயணிகள் தற்காலிகமாக சில பாதைகள் வழியாகச் செல்ல வேண்டாம் என்றும், மாற்று வழிகளைப் பயன்படுத்தி போக்குவரத்தைச் சீராக்குமாறு PLUS கேட்டுக்கொண்டுள்ளது.





















