மூவாரில் நடந்த சாலை விபத்தில் 73 வயது மூதாட்டி உயிரிழப்பு

மூவார்:

73 வயதான ஒரு பெண் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

அவர் பயணம் செய்த கார் எதிர் திசையில் சென்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது என்று,
மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் (ACP) ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அசீஸ் தெரிவித்தார்.

இந்த விபத்து புதன்கிழமை (அக்டோபர் 29) இரவு 10.10 மணியளவில் சுங்கை அபோங்–பக்ரி பைபாஸ் சாலையில் நடைபெற்றது.

“எதிர் வழியில் நுழைந்த காரை 44 வயது பெண் ஓட்டி வந்தார். மோதிய மற்றொரு காரை 19 வயது இளம்பெண் ஓட்டி வந்தார்,” என்று அவர் கூறினார்.

இந்த விபத்தில், பின் இருக்கையில் இருந்த 73 வயது பெண் கடுமையான காயங்களுக்குள்ளானதாகவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், இரு கார்களையும் ஓட்டிய பெண்கள் மற்றும் மற்றொரு பயணி லேசான காயங்களுடன் மூவார் பந்தார் மகாராணி கே.பி.ஜே. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மரணமடைந்தவரின் உடல் சுல்தானா பாத்திமா சிறப்பு மருத்துவமனைக்கு (Muar) பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாகவும், 44 வயது பெண் ஓட்டுநர் மயக்க மருந்து மற்றும் மதுபோதை எதுவும் உட்கொள்ளவில்லை என்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு சாலைப் போக்குவரத்து சட்டம் 1987-இன் பிரிவு 41(1)ன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here