அமெரிக்கா அல்லது சீனா — எவருக்கும் வளைந்து கொடுக்காது மலேசியா: பிரதமர் அன்வார்

புக்கிட் மெர்த்தாஜாம்:
மலேசியா தனது வெளிநாட்டு கொள்கையில் சுதந்திரமான மற்றும் அரசுரிமை கொண்ட நாடு என்ற அடையாளத்தை நிலைநிறுத்தி வருகின்றது என்று பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

அவர் கூறியதாவது, எந்தவொரு சக்திவாய்ந்த நாடுக்கும் வளைந்து கொடுக்காமல், நாட்டின் நலனையும் பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு மலேசியா தன்னுடைய கொள்கைகளை தீர்மானிக்கிறது.

“மலேசியா எப்போதும் சுதந்திரமான முடிவுகளை எடுக்கும் நாடு. எந்த வெளிநாட்டு சக்திக்கும் தலைவணங்காது. நாங்கள் நட்பு மற்றும் வர்த்தக உறவுகளை அனைத்து நாடுகளுடனும் — அமெரிக்கா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உட்பட — பராமரிக்கின்றோம்,” என்று அவர் தெரிவித்தார்.

அவர் பட்டர்வொர்த்தில் உள்ள வடக்கு–தெற்கு விரைவுச்சாலையின் ஜுரு–சுங்கை துவா சாலைக் கட்டண முகப்பு போக்குவரத்துச் சீரமைப்பு திட்டத்தின் நிலந்திருத்தும் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.


“அமெரிக்காவுடன் நல்லுறவு உள்ளது — ஆனால் அது எங்களை கட்டுப்படுத்தாது”

“அமெரிக்காவுடன் மலேசியாவுக்கு நல்ல உறவு உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற 47வது ஆசியான் மாநாட்டில் அமெரிக்காவுடன் வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட்டோம். அதிபர் டொனால்டு டிரம்ப் உடனும் உரையாடினோம். ஆனால் சிலர் அதற்கே ‘அமெரிக்காவுக்குத் தலைவணங்கிவிட்டோம்’ என குற்றம் சாட்டினர் — இது தவறான பார்வை.”

அவர் மேலும் கூறினார், ஜி20 அமைப்புக்குத் தலைமை வகிக்கும் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமஃபோசாவை தாம் அழைத்ததாகவும்,

“அமெரிக்கா தனது அதிகாரிகளுக்கு ஜி20 மாநாட்டில் பங்கேற்கத் தடை விதித்துள்ளது. ஆனால் நாங்கள் பங்கேற்போம். ஏனெனில் மலேசியா சுதந்திரமான, அரசுரிமை கொண்ட நாடு. மற்றவர்களின் உத்தரவுக்குக் கீழ்ப்படிய மாட்டோம்,” என வலியுறுத்தினார்.


அரிய வகைக் கனிம வளங்களிலும் வெளிநாட்டு முதலீடுகள் தொடரும்

“அரிய வகைக் கனிமங்கள் (Rare Earth Minerals) தொடர்பான ஒப்பந்தம் அமெரிக்காவுடன் மட்டுமே எனச் சிலர் கூறுகிறார்கள் — அது முற்றிலும் தவறானது.
பாகாங்கில் ஆஸ்திரேலியாவும், பேராக்கில் சீனாவும் முதலீடு செய்து வருகின்றன. எனவே எதற்கும் கட்டுப்பாடு இல்லை.”

அவர் வலியுறுத்தியதாவது, மலேசியா பன்முக உறவுகளை பேணும் கொள்கையைக் கடைப்பிடித்து, அனைத்து நாடுகளுடனும் சமநிலையான பொருளாதார மற்றும் மூலதன ஒத்துழைப்பை மேற்கொள்வது தனது அரசின் முக்கிய நோக்கமாகும்.


மக்களின் நலனே முன்னுரிமை

அன்வார் தனது உரையை முடிக்கும்போது கூறினார்:

“நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் உகந்த தீர்மானங்களே எடுக்கப்படும். வெளிநாட்டு அழுத்தங்கள் அல்லது அரசியல் கணக்கீடுகள் எங்கள் கொள்கைகளை பாதிக்காது.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here