சிறப்பாக நடனமாடக் கூடியவர் விஜய்; பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்

இந்தியத் திரையுலகில் சிறப்பாக நடனமாடக் கூடிய நடிகர் யார் என்பது தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நடிகை கீர்த்தி சுரேஷ் மன்னிப்பு கோரியுள்ளார்.

இவர் நடித்த ‘ரகு தாத்தா’ படம் தொடர்பான நிகழ்ச்சியின்போது, ‘சிரஞ்சீவி, விஜய் ஆகிய இருவரில் சிறப்பாக நடனமாடக் கூடியவர் யார்’ எனக் கேட்கப்பட்டது. இதற்கு, ‘விஜய்’ என்று பதில் அளித்ததால் சிரஞ்சீவி ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைய, வெடித்தது சர்ச்சை. சமூக ஊடகங்களில் விஜய், சிரஞ்சீவி ரசிகர்கள் காரசார விவாதங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ‘ரிவால்வர் ரீட்டா’ பட நிகழ்ச்சியில் பேசியபோது, தாம் ஒருபோதும் யார் மனத்தையும் புண்படுத்தும் விதமாக கருத்து தெரிவிக்கவில்லை என்றும் முன்பு தாம் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதில் தயக்கம் இல்லை என்றும் கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

“சிரஞ்சீவி மீது மிகுந்த மரியாதை உண்டு. என் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள அவர், ஒவ்வொரு முறை நேரில் சந்திக்கும்போதும் பல்வேறு அறிவுரைகளைக் கூறி வழிநடத்துவார்.

“விஜய், சிரஞ்சீவி இருவரில் யார் நடனக் கலைஞர் என்ற கேள்விக்கு உடனே பதில் தெரிவிக்க வேண்டிய அவசரத்தில், விஜய் என்று கூறினேன். மற்றவர்களின் மனம் இதனால் காயப்பட்டிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்,” என்று கூறி, இவ்விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here