‘டித்வா’சூறாவளியால் இலங்கைக்கு $5.2 பில்லியன் சேதம்: உலக வங்கி

உலக வங்கியின் Global Rapid Post-Disaster Damage Estimation (GRADE) அறிக்கையின்படி, இலங்கையின் பொருளாதாரத்தில் இந்தச் சூறாவளி ஏற்படுத்திய தாக்கம் மிகக் கடுமையானது.

அந்நாட்டின் சாலைகள், பாலங்கள் மற்றும் ரயில்வே அமைப்புகள் சீர்குலைந்ததால் சுமார் $2.23 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய மலைநாட்டையும் கொழும்பையும் இணைக்கும் போக்குவரத்து வழிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

சுமார் 91,000-க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவோ அல்லது முற்றாகவோ சேதமடைந்துள்ளன. இதன் மதிப்பு $1.2 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் மட்டும் சுமார் $689 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.

வீடுகள் மட்டுமன்றி சுமார் 175,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் (மொத்த விவசாய நிலத்தில் 7.6%) அழிந்துள்ளன. மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் சுமார் 1.50 லட்சம் ஹெக்டேர் நெல் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

தேயிலை ஏற்றுமதி: இலங்கையின் முதுகெலும்பாகக் கருதப்படும் தேயிலை உற்பத்தி சுமார் 35% வரை குறையக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை (UN): பாதிக்கப்பட்ட 6.5 லட்சம் மக்களுக்கு உடனடி உயிர்காக்கும் உதவிகளை வழங்க $35.3 மில்லியன் (சுமார் 1,100 கோடி இலங்கை ரூபாய்) நிதியைக் கோரி ‘மனிதநேய முன்னுரிமைத் திட்டத்தை’ (HPP) ஆரம்பித்துள்ளது.

இந்தியா தனது INS விக்ராந்த் (INS Vikrant) மற்றும் INS உதயகிரி ஆகிய போர்க்கப்பல்கள் மூலம் அவசர கால நிவாரணப் பொருட்களைக் கொழும்பு துறைமுகத்திற்கு அனுப்பி வைத்தது.

சர்வதேச நாணய நிதியம் (IMF): புயல் பாதிப்பிலிருந்து மீள்வதற்காக இலங்கைக்கு சுமார் RM 1,850 கோடி (நிவாரண நிதி) வழங்க முன்வந்துள்ளது.

யுனிசெஃப் (UNICEF): இந்தச் சூறாவளியால் சுமார் 2.75 லட்சம் குழந்தைகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது. சுத்தமான குடிநீர் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

பிற நாடுகள்: கனடா ($2 மில்லியன்), ஆஸ்திரேலியா (AUD 1 மில்லியன்) மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தங்களின் நிதி மற்றும் மருத்துவ உதவிகளை அறிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here