கோலாலம்பூர்:
TEKUN நேஷனலின் கீழ் இந்திய சமூக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்திற்கு (SPUMI) தற்போது வழங்கியுள்ள RM30 மில்லியன் ஒதுக்கீட்டை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என்று துணை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் டத்தோ ஆர். ரமணன் முன்மொழிந்துள்ளார்.
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் டத்தோ இவான் பெனடிக்கை சந்தித்தபோது, அவர் இந்தக்கோரிக்கையை முன்வைத்ததாகவும், இந்த விஷயத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிடம் தான் நிச்சயம் கொண்டு செல்வதாகவும் இவான் உறுதியளித்தார்.
“அதே நேரத்தில், இந்திய சமூகத்திற்குப் பயனளிக்கும் பிற அரசு இலாக்காக்களை, குறிப்பாக SME கார்ப்பரேஷன் மலேசியா (SME corp ), மலேசியாவின் கூட்டுறவு ஆணையம் மற்றும் அமைச்சகத்தின் கீழ் உள்ள பிற நிறுவனங்களின் கீழ் உள்ள மற்ற சேவைகள் வாய்ப்புக்களை இந்திய சமுதாயம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்” என்று டத்தோ இவான் கூறினார்.
“பல தொழில்முனைவோருக்கு ஆதரவும் உதவியும் தேவை என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அவர்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளை செய்வோம்,” என்று அவர் நேற்று தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ரமணன் டத்தோ இவானைச் சந்தித்து இந்த ஆண்டுக்கான பல்வேறு திட்டங்கள் மற்றும் அமைச்சகத்தின் வழிகாட்டுதல் குறித்து விவாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.